நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஐpலிங்கம் இன்றை அவை
அமர்வில் கலந்து கொண்டமையினால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.
வடக்கு மாகாண சபையின் 32 ஆவது அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போது வேட்பாளர் சிவாஜிலிங்கம் சபை அமர்வில் கலந்து கொண்டார். இதன்போது ஆளுநரின் அலுவலகம் விஸ்தரிப்பு தொடர்பில் பேச முற்பட்ட போதே இந்தச் சர்ச்சை சபையில் ஏற்பட்டது.
வேட்பாளர் ஒருவர் இவ்வாறான அமர்வுகளில் பேசக்கூடாது. அவரது கருத்துக்கள் பதிவுசெய்யக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் அவைத்தலைவரும் குறித்த விடயத்தினை கருத்தில் கொள்ளுமாறும் தங்களது கருத்துக்கள் பதிவு செய்யப்பட மாட்டாது என்றும் உரையாற்ற அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், மாகாண சபையில் உள்ள பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்கள் அனைவரும் விடுமுறையில் உள்ளனர். எனினும் உறுப்பினர் சிவாஜிலிங்கம் விடுமுறை கூடஎடுக்கவில்லை.
மாகாண சபை உறுப்பினராக உள்ள ஒருவர் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் போது சபை அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என கட்சி தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மிக தெளிவாக தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஏனைய உறுப்பினர்கள் விடுமுறை கோரி அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், தனது உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.