தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த கர்மவீரர் காமராஜர் படியாத மேதை என்று புகழப்பட்டவர். மக்கள் பணி என்பதைத் தவிர தன்னலம் என்பது சிறிதும் அறியாச் செம்மல்.
எந்த விடயத்தைப் பற்றி கதைத்தாலும் முடியாது என்று அவர் ஒருபோதும் கூறுவது கிடையாது. ஆகட்டும் பார்க்கலாம் என்பதே அவரின் பதில். காமராஜரின் ஆகட்டும் பார்க்கலாம் என்ற சொற்பதத்தை பலரும் உச்சரிப்பது உண்டு.
தன்னடக்கம், பொறுமை, நிதானம் என்ற அத் தனை பண்புகளுக்கும் காமராஜர் சொந்தக்காரராக இருந்தார். இது போன்ற தலைவர்களின் இராஜதந்திரமே இந்த உலகில் இன்றுவரை பேசப்படுகிறது.
அந்த வகையில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வித்தியாசமான தலைவராகக் காணப்படுகிறார். நாட்டில் அமைதி, சமாதானம் என்பவற்றின் அடிப்படை அவரின் பொறுமையும் நிதானமும் என்பது உணரப்பட வேண்டும்.
மகிந்த ராஜபக்ச தேர்தலில் நின்ற போது அதனை அவர் தடுக்கவில்லை. அதேநேரம் கட்சியின் தலைமைப் பதவி என்பதனையும் அவர் விட்டுக் கொடுக்கவில்லை.
தேர்தல் முடிந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மைப் பலத்தை பெறாத போதிலும் அந்தக் கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் எம்.பிக்களை கட்சித் தலைவர் என்ற வகையில் தானே நியமிப்பேன் என்று மைத்திரி அறிவித்த போது மகிந்த ராஜபக்வின் அத்தனை முயற்சிகளையும் மைத்திரி மிக எளிமையாகத் தட்டி விட்டார் என்பது தெளிவாகிறது.
எதிலும் நிதானம், பொறுமை என்பவற்றைக் கடைப் பிடிப்பதன் காரணமாக ஜனாதிபதி மைத்திரியின் இராஜதந்திரம் உச்சப் பயனைத் தருகிறது. இதற்கு மேலாக ஜனாதிபதி மைத்திரியின் மிகப் பெரிய இராஜதந்திரம் அங்கஜன் இராமநாதனுக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் வழங்கியமையாகும்.
வடக்கில் ஐக்கிய தேசியக் கட்சி ஓர் ஆசனத்தை பெற்றிருக்கும் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கூட்டுக் கட்சியின் ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் வடக்கில் கட்டி எழுப்ப வேண்டும் என்று கருதிய ஜனாதிபதி மைத்திரி, அங்கஜனுக்கு தேசியப் பட்டியலில் நியமன எம்.பியை கொடுத்துள்ளார்.
2010ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது அங்கஜன் இராமநாதன் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி கண்டிருந்தார். எனினும் அப்போது மகிந்த ராஜபக்ச அங்கஜனுக்கு தேசிய பட்டியலில் இடம்கொடுப்பது பற்றிச் சிந்தித்திருக்கவில்லை.
அன்று மகிந்த ராஜபக்ச அங்கஜனுக்கு தேசிய பட்டியலில் எம்.பி பதவி கொடுத்திருந்தால், இன்று அங்கஜன் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெறுவதற்குச் சாத்தியமாக இருந்திருக்கும்.
ஆக, வடபுலத்தில் தனது கட்சிப் பலத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று மகிந்த நினைக்காத போதிலும், ஜனாதிபதி மைத்திரி அந்த விடயத்திலும் மிகக் கவனமாகச் செயற்பட்டுள்ளார்.
மகிந்தவுடன் மிக நெருக்கமாக இருந்த அங்கஜன், ஜனாதிபதி மைத்திரியுடன் சேர்ந்து கொண்ட போது அதுபற்றி எந்தக் கிலேசமும் அடையாமல் அங்கஜனுக்கு எம்.பி பதவி கொடுத்த மைத்திரியின் இராஜதந்திரத்திற்கு தமிழ் அரசியல் தலைமைகள் எங்ஙனம் ஈடுகொடுக்கப் போகின்றன? என்பது தெரியவில்லை.
பழைய சைக்கிளை தூக்கி எறியுங்கள் என்று கூறிய முதியவர் சம்பந்தர் வடக்கில் வெற்றிலை தழைக்கப் போவதை அறியாமல் இருந்ததுதான் மிகப் பெரிய அபத்தம்.