தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொள்வற்கு அரசியல்வாதிகள் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அரசியலமைப்பு அதற்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கபினட் அமைச்சர்கள் தொகை 30க்குள்ளும், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் எண்ணிக்கை 40க்குள்ளும் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இரண்டு கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையில் சற்று அதிகப்படுத்தி, கபினட் அமைச்சர்கள் தொகை 45க்குள்ளும், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் எண்ணிக்கை 55க்குள்ளும் இருக்கும் வகையில் அமைச்சரவையை அமைத்துக் கொள்ள முடியும்.
எனினும் ஆரம்பத்தில் 30 அமைச்சர்கள் மற்றும் 55 இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களுடனும் அமைச்சரவையை நியமித்து விட்டு, நாடாளுமன்றம் கூடிய பின் இரண்டு வாரங்களுக்குள் அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆல் அதிகரித்துக் கொள்ள முடியும் என்றும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் வரையறுத்துள்ளது.
இதன் காரணமாக தேசிய அரசாங்கத்தின் ஆரம்ப கட்டத்தில் அமைச்சுப் பதவிகளை பெற முடியாதவர்கள் இரண்டாம் கட்டத்தில் அமைச்சுப் பதவிகளை பெறும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.