கூட்டுறவுத்துறை உறுப்பினர்களின் வைப்புப் பணத்திலிருந்து சுமார் 200கோடி ரூபா பணம் மஹிந்த அரசாங்கத்தினால் முறைகேடான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய வைப்பு நிதிகளில் கூட்டுறவு வைப்பு நிதியும் ஒன்றாகும். கூட்டுறவுச்சங்கங்களின் உறுப்பினர்களின் நிதிவைப்புகளைக் கொண்டு இந்த நிதியம் இயங்கி வருகின்றது.
இந்நிலையில் இந்த நிதியத்தின் உள்ளக கணக்காய்வு அறிக்கையொன்றின் மூலம் சுமார் 200 கோடி ரூபா பணம் கையாடப்பட்டுள்ளமை அண்மையில் தெரியவந்திருந்தது.
கடந்த மஹிந்த அரசாங்கம் இந்தப் பணத்தை முறையற்ற வழிகளில் பயன்படுத்தி இருப்பதும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
2011ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு தின வைபவங்களின் போர்வையில் இந்த நிதிக் கையாடல் நடைபெற்றுள்ளது. இதற்கான செலவினங்களுக்கு ஒழுங்கான பதிவுகள் இல்லாத நிலையில், வரவுக் கணக்குகளும் முறையாக பதியப்பட்டிருக்கவில்லை.
அத்துடன் விழாவின் கண்காட்சி விற்பனைக் கூடங்கள் மூலம் கிடைக்கப் பெற்ற வருமானமும் மொத்தமாக கையாடல் செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.