மங்களூரில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த மங்களூர் விரைவு ரெயில் நள்ளிரவு 2.30 மணிக்கு கடலூர் விருத்தாச்சலம் அருகே பூவனூர் என்ற இடத்தில் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 42-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை வரும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ஒட்டக்கோவிலிலும், முத்துநகர் எக்ஸ்பிரஸ் செந்துறை ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதே போன்று பொதிகை எக்ஸ்பிரஸ் தாளா நல்லூரிலும், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஈச்சங் காட்டிலும், நெல்லை எக்ஸ்பிரஸ் மாத்தூரிலும் நிறுத்தப்பட்டுள்ளன. ரெயில் விபத்தால் பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ள அனந்தபுரி, பொதிகை, முத்துநகர், பாதர், ராஜ்போர்ட் நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 8 ரெயில்களை, தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. மங்களூர் விபத்து காரணமாக முத்து நகர், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
தாமதான ரயில்கள் குறித்த விபரம் அறிந்துகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை, 044-2901 5203, 9003864692, 9443644923 ஆகியவை ஆகும். இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு எக்மோருக்கு வரும் ரயில், எக்மோரிலிருந்து புறப்பட்டுச் செல்லும், ரயில்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.