தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28ம் திகதி தொடங்கியது, இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி நேற்று முன்தினம் முதல் மழை தீவிரம் அடைந்தது.
இதன் விளைவாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை கொட்டித் தீர்த்தது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் எதிர்க்காற்று வீசியதால் அந்த இடத்திலேயே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் மெதுவாக வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகரத்தொடங்கி, நேற்றிரவு 7.30 மணி அளவில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதுவரையிலும் 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஒரு சிறுமி உள்பட 5 பேரும், கடலூர் மாவட்டத்தில் 16 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 3 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 பேரும், கன்னியாகுமரி, திருவாரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா ஒருவரும், புதுச்சேரியில் ஒருவரும் பலியாகி உள்ளனர்.
|