தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து பரிதவிக்கும் சூழ்நிலையில், அவர்களுக்கான நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவிகள் வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 5 கோடி ரூபாய், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் தனது பங்களிப்பாக 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதையடுத்து இரு மாநில முதலமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஜெயலலிதா தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பேரழிவு மிகப்பெரிய துன்பத்தை அளித்ததாக கூறியுள்ளார். மேலும், மழை பாதிப்பு குறித்து கவலை தெரிவித்ததுடன், மீண்டு வருவதற்கு வாழ்த்து தெரிவித்தமைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.