தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்ய தவறும் பட்சத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ரெலோ கட்சியைச் சேர்ந்த இருவர் வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லையெனவும் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனிற்கு அறிவித்துள்ளார்.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியை தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றிருந்தன.
இந்நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையிலேயே தமிழீழ விடுதலை இயக்கம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.