மாநிலங்களை அமைத்து இணைப்பதற்கும்,பிரிப்பதற்கும் மாகாண சபைகளுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வடமாகாண சபையின் எதிர்பார்ப்பது ஒருபோதும் நிறைவேறாது என்றும் குறிப்பிட்டார்.
யோசனைகள் முன்வைத்துவருவதை பார்த்தால் எதிர்காலத்தில் ஈழதேசமும் உருவாக்க வடமாகாண சபை முயற்சிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
புதுவருடப் பிறப்பை முன்னிட்டு தென்மாகாணத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சிலர் தங்காலை – கால்டன் இல்லத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்த அவர்கள், அங்கு இடம்பெற்ற பாற்சோறு விருந்திலும் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே மஹிந்த ராஜபக்ச இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வடமாகாணத்தில் யோசனைகள் கொண்டுவந்து ஈழ நாடும் உருவாக்குவதற்கு முயற்களும் இடம்பெறலாம். இது அவர்களது முதல் நடவடிக்கையானும். எனினும் மாகாண சபைகளுக்கு நினைத்தாற்போல் தான்தோன்றித்தனமாக தீர்மானங்களை எடுக்கவோ அல்லது வெவ்வேறு மாநிலங்களை அமைக்கவும், மாநிலங்களை இணைக்கவும். பிரிக்கவுமோ முடியாது. அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அந்த வகையில் வடமாகாண சபையின் எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறாது.
இந்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தொடர்பில் தெரியாது. ஆனாலும் இதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்பதோடு நாட்டு மக்களும் இதற்கு அனுமதி வழங்கப்போவதுமில்லை.
நல்லாட்சி அரசாங்கத்திலும் நாட்டை நேசிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இதற்கு எதிர்ப்பை நிச்சயம் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.