வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் அரச தலைவர் செயலகம் மற்றும் தலைமை அமைச்சர் செயலகம் உள்ளிட்ட அனைத்துச் செயலகங்களும் இணைந்து நடமாடும் சேவைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்கள், மாகாண நிர்வாக அதிகாரிகள் ஆகியோருக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதன்போதே வடக்கின் நான்கு மாவட்டங்களில் இந்த நடமாடும் சேவைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, வவுனியா , மன்னார் மாவட்டங்களில் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த நடமாடும் சேவை இடம்பெறும். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மே மாதம் 20ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்கும் இடையில் இந்த நடமாடும் சேவைகள் நடத்தப்படும்.
இந்த நடமாடும் சேவை மூலம் உடனடியாகவே தேவைகளை நிறைவு செய்யும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது