தயா மாஸ்டரைத் தாக்கிய வயோதிபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் வைத்து கடந்த 9ம் திகதி மாலை தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வே. தயாநிதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அலுவலகத்தின் வரவேற்பு அறைக்குள் நுழைந்த வயோதிபர் ஒருவர் அங்கு பணியிலிருந்த செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்திய போது, முதியவரை பிடித்த நிறுவனப் பணியாளர்கள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைகளின் பின்னர் முதியவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் நீதிமன்றின் உத்தரவில் அவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் முதியவர் இன்று மீண்டும் மன்றில் முற்படுத்தப்பட்டார். வழக்கை விசாரணை செய்த யாழ்ப்பாணம் நீதவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபரை 2 சரீரப் பிணையில் விடுக்க உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் மார்ச் 20ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.