ஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்த டிடிவி தினகரன், 45 நிமிடங்கள் மட்டுமே சந்தித்து பேசியதாக தெரிவித்திருந்தார். சிறையில் சசிகலா மவுன விரதம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார் தினகரன். இன்றைக்கு மிகப்பெரிய பஞ்சாயத்து சிறையில் நடந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெயாடிவியை ஆரம்பத்தில் இருந்தே டிடிவி தினகரன் மனைவி அனுராதாவும், அவரது தங்கை பிரபாவும்தான் கவனித்து வந்தனர். தற்போது இளவரசி மகன் விவேக் நிர்வாகத்தின் ஜெயா டிவி வந்துள்ளது.
சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பும் விவேக்கிடம் உள்ளதால் தினகரன், திவாகரன், விவேக் இடையே பனிப்போர் நிலவுகிறது.இந்த சூழ்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார் தினகரன். அவருக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்கள் உள்ளனர். சொத்துக்களையும், ஜெயாடிவி, நமது எம்ஜிஆர் நாளிதழையும் டிடிவி தினகரன் தனது வசமாக்க முயற்சி செய்து வருகிறாராம்.
அதிகாரத்தில் உள்ளவர்களோடு கைகோர்த்துக் கொண்டு குடும்பத்துக்கு எதிராக விவேக் செயல்படுகிறார் என்பது தினகரன் வைக்கும் குற்றச்சாட்டு. ஜெயா டி.வி. நிர்வாகத்தை விவேக்கால் திறம்பட நடத்த முடியவில்லை. ஆட்சிக்கு எதிராக நான் செய்கின்ற அரசியலுக்கு அந்தக் குடும்பம் இடையூறு செய்கிறது என சசிகலாவை நேரில் சந்தித்துப் புலம்பினார் தினகரன்.
சசிகலா பாதுகாத்த கஜானா சாவி இப்போது விவேக் வசம் இருக்கிறது. அதனையும் கைப்பற்ற வேண்டும் என்பது தினகரனின் விருப்பம். எனவே இன்றைய சசிகலா உடனான சந்திப்பில் தினகரன் குடும்ப பஞ்சாயத்து குறித்து பேசுவார் என்று தகவல் வெளியானது.
இதனிடையே சசிகலாவை சந்தித்து பேசிய டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 15 நாட்களுக்கு ஒருமுறை சசிகலாவை சந்திக்க வருகிறேன். என்னுடன் வருபவர்கள், வழக்கறிஞர்களை மட்டுமே சசிகலா சந்திகிறார், சசிகலாவை அதிகபட்சமாக 6 பேர் மட்டுமே சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்கிறது என்று கூறினார். இளவரசி, சுதாகரனை சந்திக்கவில்லை என்றும் தினகரன் தெரிவித்தார்.