திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது
திருச்சி:
வெளிநாடுகளில் இருந்து தொடர்ச்சியாக தங்கம் கடத்தி வரப்படும் சம்பவம் திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று விமான நிலையத்திற்கு திடீர் என வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.
மதுரையில் இருந்து வந்திருந்த துணை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் ஆய்வாளர்கள் 3 பேர் உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
சுங்கத் துறை அதிகாரிகள், விமான நிலைய பணியாளர்கள், அங்கு செயல்படும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அனைவரின் பொருட்கள், ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டன.
இரண்டாவது நாளாக இன்றும் சிபிஐ சோதனை நீடித்தது. பயணிகள், விமான நிலைய பணியாளர்கள், வியாபாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள் என 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் சுங்கத்துறையின் உதவி ஆணையர் மற்றும் 2 கண்காணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.