குறித்த புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு தனக்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லையென அதற்கு எதிராக தயாசிறி எம்.பி கடும் கோசங்களை எழுப்பிய நிலையிலேயே சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. பாராளுமன்றம் நேற்று காலை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியபோது, சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பிப்பு மற்றும் வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின் பின்னர் பிரதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, திருகோணமலை சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்க எழுந்த வேளை பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி அமைச்சரிடம் சில விடயங்களை முன்வைத்து, அரசியலமைப்பின் 9ஆவது சரத்திற்கமைய இலங்கை பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதுடன், அதன் 10 மற்றம் 14ஆம் பிரிவுகளுக்கமைய மதங்களுக்குரிய உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் திருகோணமலை சம்பவம் தொடர்பில் அமைச்சரிடம் சில விடயங்களை கேட்கின்றேன் என்றார். தொடர்ந்து உரையாற்றுவதற்கு தயாசிறி அனுமதி கோரிய நிலையில் அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்காமல் பிரதான சபை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். இவ்வேளையில் தயாசிறி ஆவேசமாக சபாநாயகரை நோக்கி கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார். இதனால் சில நிமிடங்கள் சபையில் அமைதியின்மை நிலவியது. |