16 ஆண்டாக படுக்கையில் இருக்கும் வாலிபரை காதலித்து மணந்த இளம்பெண்
தக்கலை மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் உல்லியம். கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னம்மாள். இவர்களுக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகுமார், ஜெயகுமார் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். 10-வது வயதில் விஜயகுமார், ஜெயகுமாரை மர்ம நோய் தாக்கி இருவரும் படுத்த படுக்கையானார்கள்.
பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. தங்களுக்கு பிறகு பிள்ளைகளை யார் கவனிப்பார்கள்? என்று ஜார்ஜ் உல்லியமும், அன்னம்மாளும் வருந்தினர்.
ஜார்ஜ் உல்லியம் வீட்டுக்கு சபை ஊழியர்கள் ஜெபம் செய்ய வரும்போது மஞ்சுஷாவும் வருவது வழக்கம். அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற மஞ்சுஷாவுக்கு விஜயகுமார் மீது காதல் அரும்பியது. விஜயகுமாரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதை மஞ்சுஷா தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
அவர்களும், விஜயகுமாரின் பெற்றோரும் திருமணத் துக்கு சம்மதம் தெரிவித்தனர். இன்று அவர்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. விஜயகுமாரின் வீட்டில் மிக எளிமையாக இன்று காலை விஜயகுமார்-மஞ்சுஷா திருமணம் நடந்தது.
பெற்றோர், ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் விஜயகுமார், மஞ்சுஷாவுக்கு தாலிச் செயின் அணிவித்தார். மஞ்சு, விஜயகுமாரின் கையில் மோதிரம் அணிவித்தார். 16 ஆண்டுகளாக எழுந்திருக்க முடியாத வாலிபரை கரம்பிடித்த மஞ்சுஷா நிருபர்களிடம் கூறுகையில் `விஜயகுமாரை நான் மனதார காதலித்தேன். தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளோம். கடைசி காலம் வரை விஜயகுமாரை நான் பார்த்துக்கொள்வேன்' என்றார்.
திருமண விழாவில் பத்மநாபபுரம் ஜனதா தள நகர தலைவர் பால்ராஜ், தலித் கூட்டமைப்பு பொருளாளர் ரிச்சர்ட் மனுவேல், செயற்குழு உறுப்பினர் அருள் ஜான்சன், ஒன்றிய தலைவி பிரேம சுதா, மருதூர் குறிச்சி ஊராட்சி துணை தலைவர் ரமேஷ், மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.