அடுத்த தேர்தலில் ஜெயலலிதா அதிகாரத்தில்
இருக்க மாட்டார் : விஜயகாந்த் ஆவேசம்
இருக்க மாட்டார் : விஜயகாந்த் ஆவேசம்
நிலஅபகரிப்பு தொடர்பாக, திருத்தணி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க, விஜயகாந்த், நேற்று காலை, 11:30 மணிக்கு, சிறைக்கு வந்தார். அவரது கார், சிறை
வளாகத்திற்குள் செல்ல, சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதனால், தே.மு.தி.க., வினர், சிறைக்காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி கிடைக்காததால், விஜயகாந்த் சிறைக்கு, நடந்து சென்றார். அவருடன், திருக்கோவிலூர் எம்.எல்.ஏ., வெங்கடேசன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., சேகர் ஆகியோர் மட்டும், அனுமதிக்கப்பட்டனர்.
வெயிலை சமாளிக்கும் வகையில், தர்பூசணி, வெள்ளரி, வாழைப்பழம் ஆகியவற்றை, சிறையில் இருக்கும் அருண் சுப்ரமணியத்துக்கு, எம்.எல்.ஏ.,க்கள் எடுத்து சென்றனர். சிறையில் அரைமணிநேரம், அருண் சுப்பிரமணியனை, விஜயகாந்த் சந்தித்து பேசினார். கைது நடவடிக்கையின் போதும், சிறையில் நடத்தப்படும் விதம் குறித்தும், கண்ணீர் கசிந்தபடி, அருண் சுப்பிரமணியன் விவரித்ததாக கூறப்படுகிறது.
சந்திப்புக்கு பின், வெளியே வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம், ’’நில அபகரிப்பு வழக்கில், அருண் சுப்ரமணியத்தை கைது செய்துள்ளனர். அவர், சட்டப்படி வழக்கை சந்தித்து வெளியில் வந்தால், மீண்டும் புது வழக்கு போடுவர். என் மீதும், 32 வழக்குகள் போட்டுள்ளனர்.
"தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என்பதற்கேற்ப, இங்கு மாற்றங்கள் வரும். போலீசார், மக்களை காக்கும் பணி செய்யாமல், காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்கின்றனர். நான் போகும் இடத்தில் எல்லாம், போலீசாரை குவிக்கின்றனர். எனக்கோ, மக்கள் பாதுகாப்பிற்கோ, அதை செய்யவில்லை. நான் என்ன பேசுகிறேன், என் மீது, இன்னும் எத்தனை வழக்குகள் போடலாம் என்பதற்காகவே, இதை செய்கின்றனர்.
சிறையில் இருப்பவர்கள், அ.தி.மு.க., விற்கு சென்றுவிட்டால், வழக்குகள் எல்லாம் வாபஸ் ஆகிவிடும். அருண் சுப்ரமணியன், நிலத்தை அபகரித்து விட்டதாக வழக்கு போட்டிருக்கின்றனர். அப்படி இருந்தால், அந்த இடத்தை இடித்து, அரசு தேவைக்கு பயன்படுத்த வேண்டியதுதானே? அருண் சுப்ரமணியம், அ.தி.மு.க.,விற்கு சென்றுவிட்டால், திருவள்ளூர் மாவட்டமே அங்கு சென்று விடும் என்று நினைப்பது, முட்டாள்தனமானது. அவரை நானே, அ.தி.மு.க.,விற்கு அனுப்பி வைக்கிறேன்; வைத்துக் கொள்ளுங்கள்.
கருணாநிதி பெரியவர் என்பதால், மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணி குறித்து, அப்போது பார்த்து கொள்ளலாம். எந்த கட்சியோடாவது கூட்டணி வைத்தால் தான், ஜெயிக்க முடியுமா? கூட்டணி வைக்காமல் ஜெயிக்க முடியாதா?
கோர்ட் உத்தரவிட்டபிறகும் தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. கோர்ட் உத்தரவை, எந்த மாநில அரசும் பின்பற்றவில்லை. கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து தமிழக அரசும் அப்படித் தான் நடந்துக் கொள்கிறது. அடுத்த தேர்தலில், ஜெயலலிதா அதிகாரத்தில் இருக்க மாட்டார்’’என்று கூறினார்.