புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2013


இலங்கையில் மாநாடு நடத்தக் கூடாது: காமன்வெல்த் நடவடிக்கை குழுவுக்கு கலைஞர் வேண்டுகோள்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை ராணுவத்தினரிடமிருந்து தப்பித்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்து கடல் கடக்கும் ஈழத் தமிழர்கள் பல நாட்டு ராணுவத்தினரிடம் பிடிபடுகிறார்கள்.
அப்படி பிடிபட்டு துபாயில் இறக்கி விடப்பட்ட 45 பேரில், 19 பேரை மீண்டும் இலங்கைக்கே திருப்பியனுப்ப ஐ.நா. உத்தரவிட்டுள்ளது.

இந்த 45 பேரில் மிக முக்கியமாக புலிகளின் ராணுவப் பேச்சாளராக இருந்த இளந்திரையனின் மனைவியும், குழந்தைகளும், வேறு சில போராளிகளும் இருந்துள்ளனர். இவர்களில் எட்டு பேரை ஸ்வீடன் அரசு ஏற்றுக் கொண்டது. அமெரிக்கா 11 பேருக்குத் தஞ்சம் தருவதாக வாக்களித்துள்ளது. ஏற்கனவே ஏழு பேரை கொழும்புவுக்குத் திருப்பி அனுப்பி விட்ட நிலையில் எஞ்சியிருக்கும் 19 பேருக்குத் தஞ்சம் தர நாடுகள் எதுவும் முன்வரவில்லை. அவர்களை துபாய் அரசு கொழும்புவுக்கே திருப்பி அனுப்பத் தயாராகி வருவதாகச் செய்திகள் நமக்கும் வந்துள்ளன.
அவர்கள் தமிழர்கள், ஈழத் தமிழர்கள். அவர்களுக்காக உதவிட நமக்குத் தான் முதல் கடமை உள்ளது. நமக்கென்று ஒரு நாடு இருக்கின்றது. அவர்கள் இந்த 19 பேருடைய துயரினைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த 19 பேரும் மீண்டும் இலங்கைக்குச் செல்ல விரும்பவில்லை. வேறு எந்த நாட்டிலும் அவர்கள் தஞ்சம் அடையத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் விளக்கேற்ற இந்திய அரசு உதவிட வேண்டாமா?
இலங்கையில் மனித உரிமை மீறல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறை 2012ஆம் ஆண்டில் இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை கடந்த வாரமே பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது. 
அதில், அரசுக்கு எதிரான நிலைப் பாட்டைக் கொண்டவர்கள் தாக்குதலுக்கு ஆளாவது, காணாமல் போவது, கொலை செய்யப்படுவது என பல்வேறு கொடுமைகளைச் சந்திக்கின்றனர். இலங்கைப் பாதுகாப்புப் படையினரும், ராணுவத்தினரும் இத்தகைய மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடு கின்றனர். முக்கியமாக சமூக ஆர்வலர்கள், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகமாக உள்ளது. இவர்களை ஆட்சியாளர்கள் அச்சுறுத்துகின்றனர். அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் திடீரென மாயமாகி விடுகின்றனர். சமூக நலத்துறை அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் பகுதியில் பயமுறுத்தல், வழிப்பறி மற்றும் ஊழல் செயல்களை ஊக்குவித்து வருகிறார் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்காக சுதந்திரமான நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச அளவிலான விசாரணைக் கமிஷன் அமைத்திட வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.
இலங்கை ராணுவத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களானாலும் அவர்களுக்கு இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று நாமும் ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ள அத்தனை பேரும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தும் கூட, இன்னமும் அத்தகைய பயிற்சிகள் தொடர்வது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. 
இதற்கிடையே இன்று ஆங்கில நாளேடு ஒன்றில் வந்துள்ள செய்தியின்படி, “காமன்வெல்த்” சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் உள்ள “கேப்-டவுன்” நகரத்தில் நடை பெற்றுள்ளது. அந்த மாநாட்டில் காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனை வரும் ஒருமனதாக அந்த மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தில், காமன்வெல்த் அமைச்சர்கள் சார்ந்த நடவடிக்கைக்குழுவின் கூட்டம் 26-4-2013 அன்று லண்டன் மாநகரத்திலே நடைபெறவுள்ளது; அந்தக் கூட்டத்தில் முக்கியமாக இலங்கைப் பிரச்சினை பற்றி பரிசீலனை செய்து காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்; தொடர்ந்து இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காமன்வெல்த் போற்றி வரும் அடிப்படை கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியத்துவம் பெறுகிறது; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றெல்லாம் காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் அவர்கள், இலங்கையின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகே இலங்கை அதிபரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தற்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
25-3-2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், “இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை எக்காரணம் கொண்டும் நடத்திடக் கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
மேலும் 6-4-2013 அன்று நான் விடுத்த அறிக்கையிலும், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்பது குறித்து 26-4-2013 அன்று இலண்டன் மாநகரில் அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறேன்.
அன்றையதினம் நாம் வலியுறுத்திய அந்தக் கோரிக்கையைத்தான் இன்றையதினம் காமன் வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகளும் எதிரொலித்திருக்கிறார்கள். எனவே இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற முடிவினை காமன்வெல்த் நடவடிக்கைக் குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகள் எல்லாம் ஆதரிக்க வேண்டுமென்றும், அதற்கு நமது இந்திய அரசு தேவையான அழுத்தத்தைத் தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ad

ad