சம்பூர் காணிப் பிரச்சனையில் தலையிட்டு அம்மக்களின் குறைகளைத் தீர்த்து மக்களின் காணிகளை விடுவிப்பதில் கிழக்கு மாகாண ஆளுநர் முன்னின்று செயல்படும் விதம் பாராட்டுக்குரியது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
2006 ஆம் ஆண்டு சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த பொதுமக்கள் திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைப்பறிச்சான் (368 குடும்பங்கள்), கிளிவெட்டி (157 குடும்பங்கள்), பட்டித்திடல் (108 குடும்பங்கள்) மணல்சேனை (80 குடும்பங்கள்), என நான்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
எஞ்சிய 632 குடும்பங்கள் தமது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்கியிருந்தனர்.
இடைத்தங்கல் முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு 9 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற இம்மக்களை, அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவதில் பெரும் சர்ச்சைகள் இருந்து வருகிறது.
கடந்த பல வருடங்களாக தாங்கள் வசித்த இடங்களை இழந்து வாழும் அம்மக்களின் பிரச்சனையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அனைத்து, பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த குரல் கொடுத்து வருவதனையும் இவ்விடத்தில் நான் பாராட்டுகிறேன்.
அவ்வேளையில் அம்மக்களுக்கு சிறந்த தீர்வினை வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்றின் பெர்ணாண்டோ எடுத்த வழிமுறைகள் பாராட்டுக்குரியது.
பரந்த சிந்தனையுடன் செயல்படும் ஆளுநரின் இந்த நடவடிக்கை போன்று கிழக்கில் முன்னெடுக்கப்படும் சகல வேலைப்பாடுகளிலும் இனிமேலும் ஒத்துழைப்பு வழங்குவார் என்ற நம்பிக்கை இன்று ஏற்பட்டுள்ளது.
இதற்குரிய நடவடிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதற்கான சகல முயற்சிகளையும் கிழக்கின் முதலமைச்சர் என்ற வகையில் நான் முன்னெடுத்து வருகிறேன். மேலும் இவ்வாறான நற்செயற்பாடுகளே நிரந்தர தீர்வொன்றைப் பெறுவதற்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறிக்கொள்வதுடன்,
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் மட்டக்களப்பு மாவட்டப் பிரச்சனைகளைத் தொடர்ந்து கூறிவருகின்றார். அவைகளையும் சரியான முறையில் தீர்வுகண்டு அதனையும் நிறைவேற்றிக் கொடுக்க ஆளுநர் சிறந்த பங்களிப்பினை வழங்க வேண்டும், வழங்குவார் என்று நினைக்கிறேன்.
எனவே கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைகளில் இனிமேலும் எந்த தடைகளும் இருக்காது என்ற செய்தியினை தெரிவிப்பதில் நான் சந்தோஷமடைகிறேன். இனிமேலும் கிழக்கில் தடையாக யார் இருந்தாலும் அதனை உடைத்தெறிந்து மக்கள் பணியை சரிவர நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் தைரியமாகவும் செயல்பட்டு வருகிறேன் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.