யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியில் கஞ்சா வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பிலான வழக்கின் பிணை மீளாய்வு மனுவை யாழ்.மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொலிகண்டி கடற்பரப்பு சூழலில் 141 கிலோ கேரள கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை என்ற குற்றச்சாட்டில் போதை வஸ்து கட்ளைச் சட்டத்தின் 54 ஆம் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பாக பருத்தித்துறை நீதவான் கணேசராஜா முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிமன்றம் போதைப் பொருள் கட்டளைச் சட்டத்தின் 54 ஆம் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு பிணை வழங்க நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து நீதிபதி, அந்தப் பிணை விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்திருந்தார்.
பருத்தித்துறை நீதவானின் இந்தத் தள்ளுபடி கட்டளைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக மீளாய்வு பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
மன்றில் முன்னிலையாகியிருந்த அரசசட்டவாதி பருத்தித்துறை நீதிபதியின் தீர்ப்பு சட்டரீதியாகச் சரியானது என வாதிட்டு, போதைப் பொருள் கட்டளைச் சட்டத்தின் 84 பிரிவின் கீழ், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே, மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்க முடியும் என சட்டம் கூறுகின்றது என சுட்டிக்காட்டினார்.
இதன்படி, பிணை வழங்குவதற்கான அதிகாரம் பெற்றிராத நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டதே சட்டத்துக்கு முரணானதாகும். எனவே இந்த மீளாய்வு பிணை மனுவை மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரச சட்டவாதி கோரினார்.
அரச சட்டத்தரணியின் வாதத்தை ஏற்றுக் கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், போதைப் பொருள் கட்டளைச் சட்டத்தின் 83 ஆம் பிரிவின் கீழ், பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கே உள்ளது. நீதவான் மன்றுக்கு அல்ல என தெரிவித்து, பருத்தத்திதுறை நீதவானின் தீர்ப்பு சரியானது என ஊர்ஜிதம் செய்து, தீப்பளித்ததுடன், அந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீது மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு பிணை மனுவை தள்ளுபடி செய்தார்.