எனது 50 வருட அரசியல் வாழ்க்கையில் ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசிடமிருந்தும் ஒரு சதத்தைக் கூட நான் வாங்கவில்லை .எனவே தெற்கில் வைத்து 26 மில்லியன் எனக்கு தரப்பட்டதாக கூறும் செய்தியால் நான் மிகவும் வேதனையடைகின்றேன் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெற்கிற்கு சென்று அரசிடமிருந்து பணம் பெற்றதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பில் முதலமைச்சருடன் மாவை சேனாதிராசா பேசியதனையடுத்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினையும் இன்று ஏற்பாடு செய்திருந்தார். யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
அதன்போதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர்கள் சிலர் தெற்கிற்கு சென்று அரசிடமிருந்து பாரியளவிலான நிதியைப் பெற்றுள்ளனர் என வடக்கு முதலமைச்சர் கூறியிருந்தார்.
அது குறித்து விளக்கம் கோரி வடக்கு முதல்வருக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தேன். அந்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்கள் , மீள்குடியேற்றப்பட்ட இடங்களில் காணப்பட்ட அடிப்படை குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் வீதித்திருத்த வேலைகள் என்பவற்றை செய்வதற்கும் என அரசிடமிருந்து நிதியினைக் கேட்டுப் பெற்றுக் கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நான் 26 மில்லியனை வாங்கியதாக கூறப்பட்ட போதும் அந்தக் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை . அது அப்பட்டமான பொய். நான் 50 வருடமாக அரசியலில் உள்ளேன். ஆட்சியில் இருந்த எவரிடமும் ஒரு சதம்கூட நான் பெற்று எனது சட்டைப்பையில் போட்டுக் கொள்ளவில்லை.
இவ்வாறான கருத்து எனக்கு மிகவும் வேதனையளிக்கின்றது. நான் மக்கள் பிரதிநிதியாக உள்ளவன். மக்களுக்கு தேவையான விடயங்களை உரிய தரப்புக்களிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொடுக்க வேண்டியது எனது கடமை.
அவ்வாறு தான் குறித்த நிதி விடயத்திலும் இடம்பெற்றது. அதனை தெளிவாக வடக்கு முதலமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளேன். இன்று காலை அவருடன் ஒரு சந்திப்பினையும் மேற்கொண்டேன் .
அத்துடன் ஏற்கனவே என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு பதிலும் அனுப்பியுள்ளார். அதன்பிரகாரம் முழுமையான விளக்கங்களுடன் அவருக்கான பதில் கடிதம் ஒன்று இன்று அனுப்பி வைக்கவுள்ளேன் .
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் செயற்படவேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தும் கூட்டாகவும் ஒரே எண்ணத்துடன், ஒரே இலக்குடன், குறிப்பிட்ட அல்லது பொதுவேலைத்திட்டத்தின் அடிப்படையில் வினைத்திறனுடன் செயலாற்ற வேண்டும் என்பதே எனது எண்ணமும் கருத்தும்.
த.தே.கூ தலைமையும், மாகாண சபையும் வேறுவேறாக அல்லது முரண்பாடுகளுடன் செயற்பட இடமளிக்கக்கூடாது. ஒற்றுமையாக செயற்படாது விட்டால் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடுவோம்.
இத்தகைய முரண்பாடுகள் ஏற்பாடாமல் தடுப்பதற்கு நாம் ஒருக்கிணைப்புடன் செயற்லாற்ற ஒரு பொறிமுறை அல்லது கட்டமைப்பு அவசியமெனக் கருதுகிறேன்.
அதன் பெருட்டுத் தங்களுடன் கலந்துரையாட விரும்புகிறேன். பத்திரிகைகள், இணையளத்தளங்களில், தாங்கள் கூறினீர்கள் என குறிப்பாக 09.06.2015 அன்று யாழ். பத்திரிகை ஒன்றில் முதலாம் பக்கச் செய்தியாகவும் கொழும்பில் இரண்டாம் பக்கச் செய்தியாகவும் வெளிவந்த பின் பத்திரிகையாளர்கள் அதற்குப பதில் கூறும்படி கேட்டபொழுது 'தங்களிடம் கருத்தறிந்துதான் நான் பதில் சொல்வேன்' என்று கூறயதை அறிவீர்கள்.
ஏனெனில் தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தல் போட்டியிட்டு முதலமைச்சராகப் பதவி வகிப்பவர். மாகாண சபை எங்களுடையதுமாகும்.
தங்கள் பெயரில், முதலமைச்சர் பெயரில் வெளிவந்த அந்தச் செய்தியை மேற்கோள் காட்டி பல இணையத்தளங்களில் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோர் தெற்குக்கு அழைக்கப்பட்டு பிரதமரிடமிருந்து பெரும் நிதி, ஆடம்பர வாகனம் பெற்றதான செய்திகளும் அதைத் தொடர்ந்து விமர்சனங்களும் வெளிவந்திருக்கின்றன.
நிதியமைச்சரால், 2015 வரவு செலவுத் திட்ட அறிவிப்பில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மாவட்ட வரவு செலவுத்திட்ட அபிவிருத்தி நிதி 10 மில்லியன் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டு பின் அந்நிதி வழங்கப்படவில்லை.
மொத்தமாக வடக்கு, கிழக்கு த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் 13 கோடி (13000 லட்சம்) ரூபா கூடக் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்திருக்கவேண்டும்.
இந்த நிலையில் மத்திய அரசின் கீழ் உள்ள பனை அபிவிருத்தி சபைக்கு தேவையான நிதியே நாம் அரசிடமிருந்து கேட்டு வாங்கினோம்.
அதனை ஏற்கனவே ரிசாட் முடக்கியிருந்தார். அவரிடமிருந்து குறித்த 25 மில்லியன் ரூபாவினையும் பெற்று மீள்குடியேற்ற அமைச்சிற்குள் இருக்கின்ற பனை அபிவிருத்திச் சபைக்கு வழங்கியுள்ளேன்.
தேர்தல் வருகின்ற நேரத்தில் இவ்வாறான கருத்துக்கள் பாதிப்பினையே ஏற்படுத்தும் . எனவே வடக்கு மாகாண சபைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இணைப்புக்குழு ஒன்றினை உருவாக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையில் எந்தமுரண்பாடுகளும் இல்லை முன்னரைவிட எதிர்காலத்தில் இன்னமும் இணைந்து சேவையாற்ற வழி கிடைத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.