வலி,வடக்கு உயர்பாதுகாப்புவலயத்திற்குட்பட்டிருக்கும் 138 ஏக்கர் நிலத்தை மீள்குடியேற்றத்திற்காகவிடுவிக்கப்படவுள்ளதாக
தகவல்கள் கசிந்துள்ளன.
இது குறித்து தெரியவருவதாவது,
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலய காணிகளை மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் 25ம் திகதி நடை பெறவுள்ளது.
இக்கலந்துரையாடலுக்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்படி சில காணிகள் விடுவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் முறையே ஜே-238, ஜே-242 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் சுமார் 126 ஏக்கர் நிலத்தையும், வறுத்தலை விளான்பகுதியில்(ஜே-241) பகுதியில் 12 ஏக்கர் நிலத்தையும் மீள்குடியேற்றத்திற்காகஅனுமதிக்கவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மேற்படி பகுதிகளில்வாழ்ந்த மக்கள் 25ம் திகதி காலை 9 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு வருகை தருமாறும், அதற்கு முன்னதாக தங்கள்கிராமசேவகர்கள் ஊடாக வருகையை உறுதிப்படுத்துமாறும் கேட்கப்பட்டிருக்கின்றனர்.
காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதியும் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. எனினும் அந்த தகவல்கள் உறுதியாக கிடைக்கவில்லை.
இதேவேளை யாழ்.வரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றைய பகுதிகளின் மீள்குடியேற்ற நிலமைகள் தொடர்பாக படையினருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும்தகவல்கள் கசிந்திருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.