புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2016

அவிசாவளைபுதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றுள்ள தமிழ், சிங்கள இளைஞர் மத்தியிலான மோதலினால் பதற்ற நிலைமை

அவிசாவளை புவக்பிட்டிய வெருளுபிடிய பிரதேச புதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றுள்ள தமிழ், சிங்கள இளைஞர் மத்தியிலான
மோதலினால் பதற்ற நிலைமை உருவாகியுள்ளது.
பதட்ட நிலைமை நிலவிய சம்பவ இடத்துக்கு நேற்று நேரடியாக ஸ்தலத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இயல்பு நிலைமையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து முன்னெடுத்தார்.
அமைச்சரின் பணிப்புரையின்படி அவிசாவளை பொலிஸ் பிரிவு உள்வரும் பிரதி பொலிஸ் மாஅதிபர் ரோஹான் டயஸ் விவகாரத்தை நேரடியாக பொறுப்பேற்று பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் மனோ கணேசன் காயமடைந்தவர்களையும் பார்வையிட்டு, ஆறுதல் கூறி, அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதம் அளித்தார். சம்பவ இடத்துக்கு அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சேனநாயக்கவை நேரடியாக வரவழைத்து, தமிழ் மக்களுடன் கலந்துரையாட செய்து, மேல்நடவடிக்கைகள் தொடர்பில் உரிய பணிப்புரைகளை அமைச்சர் மனோ கணேசன் விடுத்துள்ளார்.
பிரதேசத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலைவரை, பிரதான சந்தேகநபர் உட்பட, நான்கு பெரும்பான்மை இன சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்னும் 10 பேர்வரை தேடப்பட்டு வருகின்றனர் என அவிசாவளை தலைமையக பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு அமைச்சருடன் ஜ.ம.மு. கண்டி மாவட்ட எம்பி வேலு குமார், கொழும்பு மாவட்ட ஜ.ம.மு. மேல்மாகாணசபை உறுப்பினர் குருசாமி, ஜதொகா செயலாளர் சண் பிரபாகரன், கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
அவிசாவளை புவக்பிடிய புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று முதல்நாள் இரவு நடைபெற்ற இந்த வன்முறை தொடர்பில்இ கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை வழங்க எக்காரணம் கொண்டும் பொலிஸ் உடன்படக்கூடாது என அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சேனநாயக்கவிடம் கண்டிப்பாக கூறியுள்ளேன்.
இன்று காலைவரை பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னமும் சுமார் பத்து பேர் தேடப்படுகின்றனர். நேற்று முதல்நாள் இரவு சம்பவத்தில் காயமடைந்த தமிழ் இளைஞர்களில் மூவர் அவிசாவளையிலும், இருவர் கொழும்பிலும் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று மாலை நான் அவிசாவளை சென்று திரும்பிய பின் இரவு, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய பெரும்பான்மை நபர்களை தமிழ் இளைஞர்கள் விரட்டி அடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வது ஒருபுறம் இருக்க, இந்த பகுதியில் பல வருடங்களாகவே மலையுச்சி புதுக்குடியிருப்பு கிராமத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும், அடிவாரத்து வெருளுபிடிய கிராமத்தில் வாழும் பெரும்பான்மை இன நபர்களுக்கும் இடையில் முறுகல் நிலைமை நிலவுவதை தமிழ் மக்கள் என்னிடம் எடுத்து கூறினார்கள்.
இதை செவி மடுத்துஇ இந்த பின்னணியை கவனத்தில் எடுக்கும்படி பொலிசாருக்கு நான் கூறியுள்ளேன். அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட்ட பின்னர், அப்பகுதியில் சிங்கள, தமிழ் சமூக பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், தமிழ், சிங்கள மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சமாதானகுழுவை ஸ்தாபிக்கும்படியும், இந்த கூட்டத்தில் நானும் கலந்துகொள்வேன் என பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கூறியுள்ளேன்.
அதற்கான உடன்பாடு நேற்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த கால யுத்த மற்றும் இனவாத சூழல் இன்று இல்லை. எனவே இன்று மீண்டும் பழைய பழக்கத்தில், தனிப்பட்ட முரண்பாடுகளை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்கள் மீது இனவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறுமானால், பொலிஸ்துறை பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளேன். இனி இந்த பகுதியில் இனவாத நோக்கில் சம்பவங்கள் நடைபெறாவண்ணம் உறுதி செய்வதாக, பிரதி பொலிஸ் மாஅதிபர் ரோஹான் டயஸ், அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சேனநாயக்க ஆகியோர் என்னிடம் உறுதியளித்துள்ளனர்.    

ad

ad