கடத்தப்பட்டு காணாமற் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கோரி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
உடுவில் வீதி மானிப்பாயை சேர்ந்த பரமரத்தினம் தவமலர் (வயது 50) என்பவரே நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
சும்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பம்பலப்பிட்டி சென் கிளியர் பெண்கள் பாடசாலையில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய பரமரத்தினம் றொகாண் தர்மினி (19) என்ற மாணவி கடந்த 23 ஆம் திகதி காணாமற் போயுள்ளார்.
காணாமற் போன மாணவி தொடர்பில் தாயார் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து விட்டு நேற்று முன்தினம்புதன்கிழமை தனது சொந்த ஊரான மானிப்பாய்க்கு வருகை தந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் அவரது வீட்டிற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வந்து, காணாமற் போன மகளை விடுதலை செய்து தருவதாக கூறியதுடன், 75 லட்சம் ரூபா பணத்தினை தயார்படுத்துமாறும் கூறியுள்ளார்.
அத்துடன், அவ்வாறு பணத்தினை தயார்படுத்தாவிடின், தற்போதைய சூழ்நிலை தெரியும் தானே என்றும், அதற்கு ஏற்றவாறு பணத்தினை தயார் செய்யுமாறும், தாங்கள் கூறுமிடத்திற்கு வந்து பணத்தினைத் தருமாறும் கூறிவிட்டு சட்டடென்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
நபர் வெளியேறியதும், குறித்த தாய் உடனடியாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் நடந்த சம்பவத்தினையும் கூறியுள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொண்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.