மட்டக்களப்பு - மண்முனை, தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் தமது காரியாலயங்களை வைத்திருக்கும் தனியார் நிதி நிறுவனங்களை அப்பகுதி தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அதிரடியாக மூடியுள்ளார்.
இந்த சம்பவம், (18.09.2025) இன்றயதினம் மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த நிறுவனங்கள், மண்முனை - தென் எருவில் பற்று பிரதேச சபையில் வியாபார சான்றிதழைப் பெறாததனால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியாபார சான்றிதழ் பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதிகூடிய வட்டி வீதத்தை மக்களிடமிருந்து வசூலிக்கும் நிதி நிறுவனங்கள், என்பன இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் அதிரடியாக பூட்டப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்கள்
அண்மையில், இரு தடவைகள் பிரதேச சபைத் தவிசாளருக்கும், இந்நிதி நிறுவனங்களுக்குமிடையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் வைத்து நுண் நிதிக் கடன் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், இடம்பெற்ற கலந்துரையாடலின் வியாபார சான்றிதழ் மற்றும், அதிகூடிய வீதத்தை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் பூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதக்கிணங்க இன்று மாலை தவிசாளரினால் நேரடியாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், என் உயிருக்கு என்ன அச்சுறுத்தல் வந்தாலும் நான் தயங்கமாட்டேன், மக்களுக்கு அதிக வட்டி வீதத்ததை வசூலிக்கும் நிதி நிறுவனங்களும், எமது பிரதேச சபையில் வியாபாரச் சான்றிதழ் பெறாத அனைத்து நிதி நிறுவனங்களும் பூட்டப்படும் என இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.
