ஐ.நா. அலுவலகம் முன்பாக “இராவணபலய’ ஆர்ப்பாட்டம்; பொலிஸாருடன் முறுகல்
ஐ.நா. உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து
கொழும்பில் ஐ.நா. அலுவலகத்திற்கு அருகில் இராவண பலய அமைப்பினால் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டதுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த பிக்குகள் ஐ.நா. அலுவலக நுழைவாயிலை நோக்கிச் செல்ல முயற்சித்த வேளை பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடும் முறுகல் நிலையேற்பட்டது.
நவநீதம்பிள்ளையே உனக்கு இலங்கையில் என்ன வேலை? இது ஈராக் இல்லை, வேண்டுமென்றால் அங்கு போ, இங்கு வந்து பொய்ப் பிரசாரம் செய்யாதே, நீ நவநீதம்பிள்ளையல்ல புலிப்பிள்ளை என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் கொழும்பு ஹெவ்லொக் வீதியில் தும்முல்லை சந்திக்கு அருகிலிருந்து பேரணியாக வந்த 100 பேர் வரையிலான பிக்குகளும் மற்றும் சிலரும் தும்முல்லை சந்திக்கு வந்து பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் செல்ல முயற்சித்தனர்.
இதன் போது ஏற்கனவே ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் வீதித் தடைகள் போட்டு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பொலிஸார் தும்முல்லை சந்தியிலேயே ஆர்ப்பாட்டக்காரர்களை வழி மறித்து ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் செல்ல முடியாத வகையில் தடுத்து நிறுத்தினர்.