பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டர் மீது புதிய கொலை வழக்கு
பாகிஸ்தானில் அபோதாபாத்தில் ஒரு பங்களாவில் தங்கியிருந்த அல்கொய்தா இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடன் 2011–ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க சிறப்புபடையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பின்லேடன் அங்கு பதுங்கி இருக்கும் விவரத்தை பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் ஷகீல் அப்ரடி என்பவரே அமெரிக்காவுக்கு தெரிவித்தார். இதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் அப்ரடிக்கு 33 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இவரை விடுவிக்க அமெரிக்கா வலியுறுத்தியது. பின்னர் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ததில் தண்டனை விதித்தது செல்லாது என கூறப்பட்டது. எனவே அப்ரடி விடுதலையாவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கைபெர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், டாக்டர் அப்ரடி மீது புதிய கொலை வழக்கு ஒன்றை போலீசார் பதிவு செய்துள்ளனர். புகாரில் ‘கடந்த 2005–ம் ஆண்டில் தனது மகனுக்கு ஆபரேசன் நடத்திய போது அவனை கொன்று விட்டார்’ என டாக்டர் மீது அந்த பெண் கூறியிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதை அப்ரடியின் வக்கீலும் உறுதி செய்தார். இதனால் அவர் விடுதலை ஆவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.