இராணுவத்தைத் தொடர்ந்தும் மாகாண த்தில் இருக்கவிட்டு அதன் அரவணைப்பில் குளிர் காயலாம் என்று எண்ணுவது மடமை. விக்னேஸ்வரன்
இதுவரை காலமும் அரச அதிகாரம், இராணுவ பலம், அனுசரணைப் படையின் அட்டூழியங்கள் போன்றவற்றின் உதவியுடன் நடத்திவந்த அரச நிர்வாகத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். இராணுவத்தைத் தொடர்ந்தும் மாகாணத்தில் இருக்கவிட்டு அதன் அரவணைப்பில் குளிர்காயலாம் என எண்ணுவது மடமை. எனவே மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் தத்தமது கடமைகளில் ஈடுபட சகலரும் வழியமைத்துக் கொடுக்கவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் எம்மை இயங்க விடாமல் தடுக்கின்றனர். ஒருவேளை அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையில் நெருங்கிய உறவு அடுத்த தேர்தலின் போது ஏற்பட்டால் தமது பாடு இக்கட்டானதாக அமைந்து விடுமோ என்ற கிலேசம் தான் அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுகின்றதோ தெரியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சாவகச்சேரி பிரதேச சபையின் உள்ளூராட்சி வார நிகழ்வு நேற்று இப் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றபோது நிகழ்வில் கலந்த கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
உள்ளூராட்சி வாரம் கொண்டாடப்படவுள்ளதாகவும் அதன் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெறும் என்றும் எம்மை கௌரவிக்கப் போவதாகவும் துரைராசா கூறியபோது "உங்கள் உள்ளூராட்சி வார நிகழ்வுகளைச் சிறப்பாக நடத்துங்கள். ஆனால் எங்களைக் கௌரவிக்கத் தேவையில்லை" என்று நான் அவருக்குக் கூறினேன். அவர் சரி என்று தான் சொன்னார். ஆனால் அரசியல்வாதிகளைக் கௌரவிக்காமலும் எங்களுடைய மக்களால் இருக்கமுடியாது. அவர்களைத் தேவையென்றால் நிந்தித்துத் தூற்றாமலும் இருக்கமுடியாது. அவ்வாறு ஆக்கப்பட்டு விட்டார்கள் என்று நினைக்கின்றேன்.
துரைராசா எங்கள் கட்சியின் வெற்றிக்காக தேர்தலில் பாடுபட்டவர். அவரின் கோரிக்கையைத் தட்டிக் கழிக்கமுடியாமல்தான் நேற்றைய தினம் அவசர அவசரமாகக் கொழும்பிலிருந்து வந்தேன். தேர்தலைவிடக் கூடிய கடினம் மிக்க ஒரு போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.
மக்கள் தமது மனோநிலையை தேர்தலில் எடுத்தியம்பி இருந்தாலும் அரசாங்கம் சார்பானவர்கள் அதை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்தும் தமது மத்திய அரசாங்க அதிகாரங்களை மாகாணத்தின் மீது திணித்து விடவே நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். மக்களின் நன்மதிப்பைப்பெறத் தவறியவர்கள் தொடர்ந்து ஆணைகள் இடத் துணிந்துள்ளார்கள்.
அதற்காக முன்னர் தமது கையாட்களாகப் பாவித்து வந்த அரச அலுவலர்களைத் தமக்கு துணை நிற்குமாறு வற்புறுத்தி வருகின்றார்கள். இதனால் மக்களின் தேவைகள் மற்றும் அவர்களுக்கான சேவைகள் என்பன பாதிப்படைகின்றன என்ற எண்ணம் சற்றேனும் இத்தகைய அதிகாரத்தில் உள்ள அதிகாரிகளுக்கோ அரச அலுவலர்களுக்கோ இருப்பதாகத் தெரியவில்லை. தமது அதிகாரங்களும் ஆணைகளுமே அவர்களுக்கு அத்தியாவசியமாகப் போய்விட்டன.
அரசாங்கமும் மாகாண சபையும் ஒரு கூட்டுறவு அடிப்படையில் சேர்ந்தொழுகினால்தான் மாகாண சபை நிர்வாகமும் பிரதேச சபைகள் நிர்வாகமும் வெற்றி அளிக்கமுடியும். நானோ நீயோ என்ற பாணியில் ஒருவரின் உரித்துக்களை மற்றவர் பாவிக்க எத்தனித்தால் கூட்டுறவு நிலை அழிந்து முரண்பட்ட நிலையே உருவாகும். மக்களின் நன்மை கருதி நாங்கள் அமைதியாகப் பொறுமையுடன்தான் எமது தடங்களைப் பதித்து வருகின்றோம்.
அதனை எமது வலுவின்மை அல்லது தளர்வு நிலை என்று எம்மினிய சகோதர சகோதரிகள் தப்புக்கணக்குப் போட்டுவிடக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தமது மக்களுக்கான சேவையைச் சீரும் சிறப்புடனும் செய்ய வழி அமைப்பதாலேயே மாகாணத்தில், பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் ஜனநாயகத்தின் சுவடுகள் பதிக்கப்படலாம். இல்லையென்றால் அராஜகமே மிஞ்சும்.
இது வரைகாலமும் அரச அதிகாரம், இராணுவ பலம், அனுசரணைப் படையின் அட்டூழியங்கள் போன்றவற்றின் உதவியுடன் நடாத்தி வந்த அரச நிர்வாகத்தை மக்கள் வேண்டாம் என்று தெளிவாகக் கூறிவிட்டார்கள் என்பதை இந்த அரச சார்பான அதிகாரம் படைத்தவர்கள் புரிந்து கொண்டு நடக்கப் பழகிக் கொள்ளவேண்டும்.
இராணுவத்தைத் தொடர்ந்தும் மாகாண த்தில் இருக்கவிட்டு அதன் அரவணைப்பில் குளிர் காயலாம் என்று எண்ணுவது மடமை.
எனவே மக்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றவர்கள் தத்தமது கடமைகளில் ஈடுபட வழியமைத்துக் கொடுப்பதன் அவசியத்தை சகலரும் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகின்றாம்.
இன்று உங்கள் பிரதேச சபைகயின் உள்ளூராட்சி வாரம் கொண்டாடப்படுகின்றது. உள்ளூராட்சியானது மன்னர்கள் காலந்தொடக்கம் கிராம சபைகளாக எமது நாட்டில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மத்திய அரசாங்க அமைச்சர் ஒருவரே உள்ளூராட்சி அமைச்சராக இருந்து வந்தார். காலஞ்சென்ற எஸ்.டபிள்யூ.பண்டாரநாயக்கவும் உள்ளூராட்சி அமைச்சராக இருந்து வந்தவர் என்பதை நினைவுறுத்துகின்றேன்.
எனினும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் வந்த பின்னர் தான் உள்ளூராட்சி, மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் அவை தொடர்பான வடிவம், கட்டுமானம், தேசியக் கொள்கைகள் போன்றவை தொடர்ந்து மத்திய அரசாங்கம் வசமே இருந்து வருகின்றன. 1987இல் பிரதேச சபைகள் சட்டம் வரமுன் 1939ஆம் ஆண்டு பட்டண சபைச் சட்டமும் 1974ஆம் ஆண்டில் மாநகர சபைச் சட்டமும் அமுலுக்கு வந்திருந்தன.
அந்தந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சட்டத்தால் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களையே அவ்வந்த உள்ளூராட்சி மன்றங்கள் பாவிக்கலாம். அந்தந்த உள்ளூராட்சி வரம்பெல்லைகளினுள் அமைந்திருக்கும் சமூகத்திற்கு அவர்களின் சுகம், வசதி, நலம் சார்பான சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதே உள்ளூராட்சி மன்றங்களின் கடமையாகும்.
அதாவது நிர்வாகம், ஒழுங்கு பற்றி நடவடிக்கைகள் எடுத்தல், சூழல் மேம்பாடு பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தல், பொதுமக்கள் பாவிக்குந் தெருக்கள், பொதுச் சேவைகள் போன்றவற்றைப் பாதுகாத்தல் போன்றவையும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு கடப்பாடுகள் ஆவன.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு வடமராட்சி, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் மேற்கு,வலிகாமம் தெற்கு வேலணை போன்ற பிரசே சபைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன என்று எண்ணுகின்றேன்.
மத்திய அரசாங்கத்திற்கு அடுத்ததாக மாகாண சபையும் அதற்கு அடுத்ததாக பிரதேச சபைகளும் இருந்து வருகின்றன. இவை மூன்றும் ஒருவர் மற்றவரின் எல்லைக்குள் பிரவேசியாமல் இருந்தால் தான் சுமூகமான உறவைப் பேணி வளர்க்க முடியும்.
13ஆவது திருத்தச்சட்டத்திற்கு முன்னேற்பாடாக நடந்த இந்திய– இலங்கை ஒப்பந்த விவாதங்கள் நாட்டின் சகல மாகாணங்களிலும் மாகாண சபைகளை அமைக்கும் வண்ணமாக அமையவில்லை. அப்போதைய ஜனாதிபதி தான் மாகாண சபைகளைச் சகல மாகாணங்களுக்கும் ஏற்புடையதாக்கினார். தான் தமிழர்களுக்கு ஏதேனும் சலுகைகளைக் கொடுத்துதவியதாகச் சிங்கள மக்கள் அவரை அடையாளங்காணக் கூடாது என்பதே அவருடைய இலக்காக இருந்தது. ஆனால் அதிகாரப் பரவலே 13ஆவது திருத்தச் சட்டத்தின் குறிக்கோள். அது போதுமாக அத்திருத்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதா? இல்லையா? என்று பரிசீலிக்க இதுவரை காலமும் போதிய சந்தர்ப்பங்கள் எழவில்லை.
ஏனென்றால் பொதுவாகத் தெற்கில் உள்ள மாகாண சபைகள் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அங்கத்தவர்களையே கொண்டிருந்தது. அப்படி இல்லை என்றாலும் பெரும்பான்மையின மக்களே மத்திய அரசாங்கத்திலும் இருந்தார்கள். மாகாண சபைகளிலும் இருந்தார்கள். அவர்களுக்குள் அதிகாரப் பகிர்வு கட்டாயமாகத் தேவைப்படவில்லை. உள்ளூராட்சி சிறந்து விளங்க வேண்டுமென்று அவர்கள் அபிப்பிராயங் கொண்டிருந்தார்களேயாகில் போதிய அதிகாரப் பகிர்வு தேவைப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் அவற்றை இதுவரை போதுமானதாகக் கோரவில்லை.
ஆனால் வடமாகாணம் அப்படியல்ல. நாங்கள் கட்சியால் வேறுபட்டவர்கள் மட்டுமல்லாது கலைகளால் வேறுபட்டவர்கள். மொழியினால் வேறுபட்டவர்கள். மதத்தினால் வேறுபட்டவர்கள். நிலத்தின் அமைப்பினால் வேறுபட்டவர்கள். காலாதிகாலமாகத் தனித்து வேறுபட்ட வாழ்க்கை முறையில் வளர்ந்து வந்தவர்கள். எமக்குத் தான் அதிகாரப் பகிர்வு தேவைப்பட்டது. ஆனால் சுமார் 25 வருடங்களாக அது எமக்குக் கிட்டவில்லை. தற்போது கிட்டியதுந்தான் தெரிகிறது. ஆளுநருடன் சேர்ந்து அரசாங்கம் எந்தளவிற்கு எமது அதிகாரப் பகிர்வை அர்த்தமற்றதாக்கலாம் என்பதை அவதானிக்க வேண்டும்.
அதாவது எமது அதிகாரப் பகிர்விற்காகவே 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனை 25 வருடங்களுக்கு மேல் எம் பூமியில் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் நடைமுறைப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும் அதைச் சிதைக்கச் சதி நடக்கின்றது. ஆனால் தேர்தலின் போது இவ்வாறு நடக்கக் கூடும் என்பது நாம் அறிந்து வைத்திருந்ததுதான். அடுத்த கட்டமாக இப்பேர்ப்பட்ட சதிச் செயல்கள் நாடறிய உலகறியப் பேசப்பட வேண்டியவைகளாக மாறக்கூடுவன என்பதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும்.
ஆனால் நடைமுறையைப் பார்த்தால் அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் சிலர், தமிழ் பேசும் அலுவலர்கள் சிலருடன் சேர்ந்து எம்மை இயங்க விடாமல் செய்யப் பார்க்கிறார்கள். ஒருவேளை அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையில் நெருங்கிய உறவு அடுத்த தேர்தலின் போது ஏற்பட்டால் தமது பாடு இக்கட்டானதாக அமைந்து விடுமோ என்ற கிலேசம் தான் அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுகின்றதோ தெரியவில்லை. அண்மைய தேர்தல் அவர்களின் ஆதரவு வெகுவாகக் குறைந்து வருவதை எடுத்துக்காட்டியது. அதைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று சதிகளில் ஈடுபடுகிறார்களோ தெரியவில்லை.
எது எவ்வாறு இருப்பினும் உள்நாட்டு விடயங்களை இப்பொழுதும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன். எனினும் அந்த நம்பிக்கைக்கு அதற்கு மாறான ஒரு செயலாகத்தான் மேற்கூறிய சதிகள் அரங்கேற்றப்படுகின்றன. விரைவில் சிங்களப் பொதுமக்கள் எமது யதார்த்தத் தேவைகளையும் இன்று எமக்கு நடக்கும் சதிகள் பாற்பட்ட நடவடிக்கைகளையும் புரிந்துகொண்டு தமது அரசாங்கத்திற்குப் போதுமான நெருக்குதல்களை அளிக்க முன்வருவார்கள் என்றும் நம்புகின்றேன் என்றார்.