ஜனாதிபதி மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்பு அவசியம்; இரா. சம்பந்தன்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசுவதற்கு நாம் தயார். ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களின்ஒத்துழைப்பு அவசியமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட எம்.பி. யுமான இரா. சம்பந்தன் தெரவித்தார்.
‘த இந்து’ பத்திரிகைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அளித்த பேட்டியில் பொலிஸ் அதிகாரமற்ற 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறியிருந்தார். இந்த பேட்டி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியமானது. எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளோம். பேச்சுவார்த்தைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் பேச்சுவார்த்தையின் வெளிப்படைத்தன்மையை உலகிற்கு உணர்த்தும் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தத் தயார் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியது பொலிஸ் அதிகாரிகளை வழங்க முடியாது என்ற ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் மக்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணர்ந்தமையும் தேசிய இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்றாகும். எனவே, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதுகாப்பு அதிகாரங்களை கோரியதில்லை பொலிஸ் அதிகாரங்களை மட்டுமே கோருகின்றது. அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஒன்றை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.