இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 128 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற ஓரின பாலியல் தொடர்புகளே எச்.ஐ.வி. தொற்றுக்கு பிரதான காரணம் எனவும் அந்த மத்திய நிலையம் கூறியுள்ளது.
இலங்கையில் 1985 ஆம் ஆண்டு முதல் இதுவரை 2 ஆயிரத்து 438 எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 390 நோயாளிகள் இறந்துள்ளனர்.
இதனடிப்படையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
எனினும் இந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு எயிட்ஸ் நோயாளிகள் சமூகத்தில் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாமல் தமக்கு எயிட்ஸ் நோய் இருப்பதை அறியாமலும் பலர் சமூகத்தில் இருக்கலாம் எனவும் பாலியல் நோய்கள் தொடர்பான தேசிய மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.