ஐநா பேரவை தோல்வியை சாதகமாக்கி விரைவில் ஜனாதிபதி தேர்தலை நடாத்த திட்டம்?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 வது அமர்வில் பெரும் தோல்வியைச் சந்தித்து, அதனால் சர்வதேச மட்டத்தில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் இலங்கை அரசு ஒரு தந்திரோபாயமாக ஜனாதிபதி தேர்தலை முற்கூட்டியே நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடாத்தி, அதில் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச பெரு வெற்றியீட்டுவதை உறுதிப்படுத்திக் காட்டுவதன் மூலம், இலங்கை மக்கள் இந்த ஆட்சிப் பீடத்துக்குப் பின்னால் உறுதியாக அணி திரண்டு நிற்கின்றார்கள் என்ற யதார்த்தத்தை சர்வதேசத்துக்கு உணர்த்த முடியும் என்று அரசுத் தரப்பின் உயர் வட்டாரங்கள் கருதுகின்றன.
அதுமட்டுமல்ல, விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்தொழித்த 'தேசிய சாதனை'க்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசுத் தலைமையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலகு இலக்கு வைக்கின்றது என்ற கருத்துணர்வு தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் கிளர்ந்திருப்பதை சாதகமாகப் பயன்படுத்தி ஜனநாயகத் தேர்தல் அமோக வெற்றியை ஈட்ட முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் கருதுகின்றன.
இலங்கை மீதான சர்வதேசத்தின் போக்குக்கு ஓர் இடைக்காலத் தடை போடவும், சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிராகத் தென்னிலங்கையில் எழுந்துள்ள உணர்வலைகளை அரசியல் ஆதாயமாக்கிப் பயனடையவும் ஜனாதிபதித் தேர்தலை உடன் நடத்தி உறுதியான, வெற்றியைக் காட்டுவதே சிறந்த உபாயம் என்று அந்த வட்டாரங்கள் ஜனாதிபதிக்கும் ஆலோசனைகள் கூறவிருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலில் இந்த சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தி தமது அடுத்த ஆறு ஆண்டு காலப் பதவியை உறுதி செய்வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் தீவிரமாக சிந்தித்து வருகின்றமையோடு, இது குறித்து தமது அரசுப் பங்காளர்களோடு அவர் ஆலோசனை கலந்தும் வருகின்றார் என்றும் கூறப்பட்டது.
இன்று நடைபெறும் மேல் மாகாண சபை மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் தற்போதைய தென்னிலங்கை மக்களின் இனவுணர்வெழுச்சியை சாதகமாகப் பயன்படுத்தி பெரு வெற்றியீட்டலாம் என அரசுத் தலைமை கருதுகின்றது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து அதனால் கிட்டியுள்ள மேலதிக செல்வாக்கையும் ஒரு மூலதனமாகப் பயன்படுத்தி அடுத்த ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடாத்துவது குறித்தே அரசுத் தலைமை தீவிரமாக சிந்திக்கின்றது.