தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐ.நாவை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்
யாழ். பல்கலைகழக மாணவர்களை இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியதை கண்டித்தும் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐ.நாவை கண்டித்தும் எதிர்வரும் 10ம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா பயங்கரவாத அரசினால் தமிழினத்திற்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட உச்சக்கட்ட இன அழிப்பினை அறிந்தும், அம்மக்களைப் பாதுகாக்கத் தவறிய ஐ.நாவினைக் கண்டித்தும், தொடர்ச்சியான இன அழிப்பில் இருந்து எம் மக்களை பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடி நடவடிகைகளை எடுக்குமாறு வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த 27ம் 28ம் திகதிகளில் அமைதியான முறையில் இடம்பெற்ற யாழ். பல்கலைகழக மாணவர்களின் ஒன்று கூடல்களில் இராணுவமும் பொலிசாரும் அத்துமீறி நுழைந்து, காட்டு மிராண்டி தனமான முறையில் மாணவர்களை தாக்கியுள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், இனி வரும் காலங்களில் ஜனநாயக முறையில் வெகுஜன போராட்டங்கள் நடக்கும் போது சர்வதேச சமூகம் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.
மாலை 4.00 பிப. இலிருந்து 6.00 பி.ப. வரை FCO விற்கு முன்னால் (1 King Charles Street, London SW1A 2AH) அனைத்து தமிழ் மக்களையும் ஒன்று கூடுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.