யாழ்.பல்கலை மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் இரா.சம்பந்தன் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோனுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை இன்று
நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை
தொலைபேசியூடாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்
தெரிவித்தார்.
பொலிஸாரினால்
நேற்றும் நேற்று முன்தினமும் கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் நால்வரின் விடுதலை
தொடர்பில் பொலிஸ் மா அதிபருடம் தொலைபேசி மூலம் த.தே.கூ தலைவர் கேட்டபோது
ஆரம்பத்தில் கைது தொடர்பில் தெரியாது எனவும் தனக்கு 5 நிமிடங்கள் தரும்படியும்
கேட்டிருந்தார்.
அதனையடுத்து
பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கையில், பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட
நான்கு மாணவர்களும் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும்
குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கான பற்றுச்சீட்டுகள் மாணவர்களின்
பெற்றோரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன்
மாணவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர், பதில் துணைவேந்தர் மற்றும் பெற்றோர்கள்
பார்வையிட முடியும்.
இதேவேளை,
முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியத்தலைவரான பரந்தாமன் சபேஸ்குமாரையும் கைது
செய்தவற்காக அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் பொலிஸார் சென்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அவர்
வீட்டில் இல்லாத நிலையில் பெற்றோரை விசாரித்த பொலிஸார் காலை 9 மணிக்குள் அவரை
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தவறின் உங்களை கைது செய்வோம் எனவும்
எச்சரித்துள்ளனர்.
இச்சம்பவம்
தொடர்பில் இரா.சம்பந்தன் பொலிஸ்மா அதிபரிடம் கேட்கும் போது அதற்குப் பதிலளித்த
பொலிஸ்மா அதிபர், இச்சம்பவம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும்
தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.