யாழ். அல்வாய் வடக்கு றோ.க.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டி நேற்று மாலை புனித சவேரியார் ஆலய மைதானத்தில் இடம்பெற்றது.
கல்லூரி முதல்வர் சோ.ஜெயதேவா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், வே. சிவயோகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்,
நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டி நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டோம், இன்று அதற்கான காலம் கனிந்து வருகின்றதை தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடான செயற்பாடுகள் மூலம் உணரமுடிகின்றது.
குறிப்பாக படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் கிராம சேவகர்கள் மூலம் தேவையான ஆவணங்கள் திரட்டப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான எந்தவொரு முன்னேற்பாடான செயற்பாடுகளும் கடந்த ஆட்சிகால அரசில் இடம்பெறவில்லை என்பதனால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்புவார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.
மேலும் இந்த விளையாட்டு நிகழ்வுகளில் திறமையாக செயற்பட்டு வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கு விருந்தினர்கள் கேடயங்கள் வழங்கி கௌரவித்தனர்.