ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சலாவ பிரதேசத்தில் உள்ள 12 கிராம அதிகாரி பிரிவுகளிலும், வழமை நிலையை ஏற்படுத்த 50 ஆயிரம் இராணுவத்தினரைக் களமிறக்கத் தயார் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
சீதாவாக்கை பிரதேச செயலகத்தில் நேற்று நடந்த அனர்த்த நிவாரண கூட்டத்தில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“எதிர்பாராத வகையில் இடம்பெற்ற இந்த விபத்துக்காக இராணுவத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
பொதுமக்கள், இராணுவத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதில் இறந்தவர்களின் தொகையை மறைப்பதற்கு எந்த தேவையும் இல்லை. ஒரு இராணுவ வீரர் இறந்தார், மற்றொருவர் காயமடைந்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தமது நாளாந்த வாழ்வை மீளமைக்க முடியாதுள்ளனர். அவர்கள் இயல்பு வாழ்வை ஆரம்பிக்க இராணுவம் உதவும்.
வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக12 கிராம அதிகாரிகள் பிரிவுகளிலும், 12 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்படும்.
தேவைப்பட்டால் இந்தப் பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்த 50 ஆயிரம் இராணுவத்தினரை கொண்டு வந்து நிறுத்தவும் தயாராக இருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.