பிரித்தானியாவில் இருந்து தாயகம் திரும்பிய ஈழத்தமிழர் ஒருவர் சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுக் கடும்
சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் இவரைக் கைது செய்து சிற்றூர்தி ஒன்றில் கொண்டு சென்ற சிறீலங்கா காவல்துறையினர், இவரை இரண்டு நாட்களாக இரகசிய இடம் ஒன்றில் தடுத்து வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் உறவினர்களின் முயற்சியால் இவ்விடயத்தில் பிரித்தானிய தூதரகம் தலையிட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், நீதிமன்ற உத்தரவுப்படி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கை சென்று திரும்பும் சிலர் , இலங்கை சகஜ நிலைக்கு திரும்பிவிட்டது என்றும். அங்கே தமிழர்கள் சென்றுவரக்கூடிய நிலை காணப்படுவதாகவும் கூறிவருகிறார்கள்.
ஆனால் இன்றுவரை வட கிழக்கில் இலங்கை ராணுவத்தின் ஆட்சியே நடைபெற்று வருகிறது என்பது தான் உண்மை. அவர்கள் நினைக்கும் ஆட்களை அவர்கள் வெள்ளைவேன் வைத்து கடத்துகிறார்கள். அது இன்றுவரை தொடர்கிறது.