தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசு வித்தியாசமான அணுகுமுறைகளை கையாள்கின்றபோதும், நல்லிணக்கம்
உரிய முறையில் தென்படவில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நீதி, சமத்துவம், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் அரசிடம் சரியான திட்டம் இல்லை. இதனால் தமது மக்கள் திருப்தி கொள்ள முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தை இரா.சம்பந்தன் நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் எதிர்வரம் 29 ஆம் திகதி வாய்மூல அறிக்கையும் அடுத்த வருட முற்பகுதியில் முழுமையான அறிக்கையும்,சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் வடக்கு கிழக்கின் நிலைமைகள் தொடர்பில் அரசு முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கை மீளக்கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைக்கின்றபோதும், அவை தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் இதுவரை கலந்துரையாடவில்லை என தெரிவித்த இரா.சம்பந்தன்,இந்த விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெறவேண்டும் எனவும் தெரிவித்தார்.