புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2021

சினிமா, சீரியல் ஆசையில்… சென்னை வரும் பெண்கள் தான் டார்கெட்.. பாலியல் தொழிலுக்கு தள்ளும் ‘மோசடி’ கும்பல்!.. ‘மிரள வைக்கும்’ சம்பவம்!

www.pungudutivuswiss.com
வேலை தேடி சென்னைக்கு வரும் இளம்பெண்களிடம் சினிமா, சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிய கும்பல் சிக்கியுள்ளது.


மேலும் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லியும் அந்த கும்பல் இளம் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளது. சென்னையில் சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வந்த பெண்கள் சிலரை குறிவைத்து இந்த கும்பல் செயல்பட்டுள்ளது.

சென்னையில் மேற்கண்ட வேலைகளுக்கு வரும் இளம்பெண்கள் சிலர் தங்க இடமில்லாமலும் முறையான வாய்ப்புகள் இல்லாமலும் தவிக்கின்றனர். இப்படியான பெண்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது போல் நடித்து அறிமுகமாகியுள்ளது இந்த கும்பல். இதனையடுத்து அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளுக்கு இந்தப் பெண்களை அழைத்துச் செல்வார்கள். அங்கு தங்குவதற்கு இடம் அளித்து உதவி செய்வதுபோல் செய்வார்கள். அதன் பின்னர் இந்த இளம் பெண்களின் படிப்பு, திறமை, ஆசை உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்வார்கள்.

அதற்கு தகுந்த வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி நம்பிக்கை மோசடி செய்வார்கள். இப்படி சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடுபவர்கள் இவர்களிடம் ஏமாறுவது உண்டு. இதேபோல் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு முயற்சியில் பெண்களும் இவர்களிடம் ஏமாறுவது உண்டு. அப்படித்தான் இந்த கும்பலை நம்பிய சில இளம்பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தில் இதுகுறித்து வெளியான தகவலை அடுத்து உடனடியாக போலீஸார் சோதனை நடத்தினர்.‌ அவர்கள் 10 பெண்களை மீட்டுள்ளனர். இப்படி வரும் பெண்கள் சிலர் பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டதாக சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு தகவல் கிடைத்தது. இதனால் சென்னை முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்த தொடங்கினர்.

குறிப்பாக விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் சர்மு தலைமையிலான தனிப்படை போலீசார் அடையாரில் இருக்கும் எஸ்பிஐ காலனி சென்றனர். அங்கு உள்ள மசாஜ் சென்டரில் அவர்கள் சோதனை நடத்தியபோது தான் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இந்த சோதனையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த 32 வயதான வேல்முருகன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பெண்கள் மீட்கப்பட்டனர். இந்த மசாஜ் சென்டருக்கு சொந்தமானவர் தற்போது போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவேலன் தலைமையில் அடையாறு காந்தி நகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை செய்தனர். அங்கும் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இந்த இடத்தில் திருவள்ளூர் மாவட்டம் வெங்கடேசன் எனும் 27 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர். அந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதேபோல் தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரண் பிரசாத் தலைமையிலான போலீசார் சாலிகிராமம் பகுதியில் விருகம்பாக்கம் போலீசார் துணையுடன் சோதனை நடத்தினர். சாலிகிராமம் தேவராஜ் நகரில் இருக்கும் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது அப்போது தெரியவந்தது. இதில் 49 வயதான சீனிவாசன், 53 வயதான வசீரா பானு ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதில் சீனிவாசன் வடபழனியைச் சேர்ந்தவர் என்பதும், வசீரா பானு தேவராஜ் நகரை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களிடமிருந்து 21 ஆயிரத்து 500 ரூபாய் பணம், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த 4 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மைலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்

ad

ad