புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2013


ஸ்டாலின் குழுவினரின் டில்லி பயணத்தினால் தமிழர்களுக்கு பயன் இல்லை!- உலகத் தமிழர் அமைப்புகள்
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், டில்லி சென்ற குழுவினர், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தூதர்களை சந்திக்கவில்லை. இதனால், இந்த குழுவின் பயணத்தால், எவ்வித பலனும் ஏற்படவில்லை என, உலக தமிழர் அமைப்புகள் கருதுகின்றன.
"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை, டில்லியில் உள்ள, 47 நாடுகளின் தூதர்களிடம் வழங்குவதற்காக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் டி.ஆர்.பாலு, சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர், நான்கு நாள் பயணமாக, டில்லி சென்று விட்டு சென்னை திரும்பியுள்ளனர்.
பார்லிமென்டில் இலங்கை தமிழர்களுக்காக, தீவிரமாக குரல் கொடுத்த ராஜ்யசபா எம்.பி.,க்கள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரை இந்த குழுவில் இணைத்து, அழைத்து செல்லவில்லை என்ற அதிருப்தி, தி.மு.க., எம்.பி.,க்கள் மத்தியில் நீடிக்கிறது.
அதேபோல், லண்டனில் நடந்த, தமிழ் மாநாட்டிற்கு ஸ்டாலின், டி.ஆர்.பாலுவை பங்கேற்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்த, வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
இதனால், டெசோ குழுவினர் திட்டமிட்டப்படி, ஐ.நா., சபையில் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்பு நாடுகளின் தூதர்களையும் சந்திக்க முடியவில்லை.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தூதர்களை இக்குழுவினர் சந்திக்கவில்லை.
டெசோ பிரதிநிதிகளின் இந்த டில்லி பயணத்தால், எவ்வித பயனும் விளையப் போவதில்லை என்று உலகத் தமிழ் அமைப்புகள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் டெசோ உறுப்பினர்கள் கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நாளை நடக்கிறது. அக்கூட்டத்தில் டில்லி பயணம் குறித்து விளக்கி, தொடர் நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கப்படுகிறது.
இது குறித்து, தி.மு.க.,வட்டாரங்கள் கூறியதாவது:
அழகிரியின் பிறந்த தின விழாவில், பங்கேற்பதை தவிர்க்கும் வகையில், தன் டில்லி பயணத்தை, ஸ்டாலின் வகுத்துக் கொண்டார்.
ஐ.நா., சபை உறுப்பு நாடுகளின் தூதர்களிடம், தி.மு.க., - எம்.பி.,க்களை அழைத்து செல்லவில்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுலை, ஸ்டாலின் சந்திக்காமல் வந்ததும், டெசோ குழுவினருக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் வரை இலங்கை தமிழர்கள் பிரச்னையில், ஆதரவான நிலைப்பாட்டை காட்டியாக வேண்டும் என்பதற்காக, டெசோ கூட்டம் நாளை கூட்டப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப் போவதில்லை. இந்தியாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிப்பது, இலங்கை போர் குற்றங்கள் குறித்து, இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா.,வில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரித்து, அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்படும். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ad

ad