800 கிலோ சங்குகளுடன் மன்னாரில் மூவர் கைது
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 800 கிலோகிராம் சங்குகளை கைப்பற்றியதுடன் ,3 சந்தேக நபர்களையும் நேற்று இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
கடல் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் 70 மில்லி மீற்றர் நீளத்துக்கு குறைவான சங்குகளைப் பிடிப்பதும் அவற்றை எடுத்துச் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட 800 கிலோகிராம் சங்குகளையே கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சங்குகளும் சந்தேக நபர்கள் மூவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.