உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வெளியிடத் தவறினால் பொதுமக்களை இணைத்து நாட்டிலுள்ள பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
ஹட்டன் கினிகத்தேனை பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஆயுட்காலம் நிறைவடைந்து. கலைக்கப்பட்டிருக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதியன்று வெளியிடுவதற்கு அரசாங்கம் தவறினால் அதற்கெதிராக பொதுமக்களை திரட்டி நாடு முழுவதும் பிரதான வீதிகளை இடைமறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்த எதிர்பார்த்திருக்கின்றோம்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்ற எத்தனிக்கும் சட்டமூலங்களையும், பிரேரணைகளையும் தோற்கடிக்க நடவடிக்கை எடுப்போம்.
இந்த நாட்டின் பொருளாதாரம் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு தற்போது வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்றது என்றார்.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கம, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தின் பின்னர் இந்த நாட்டில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்த நாட்டில் பாரிய புரட்சியை செய்து நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.