ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஜெயக்குமார் தற்போது புழல் சிறையில் உள்ளார். அவருக்கு கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டதால் புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜெயக்குமார் நேற்று காலை 10.30 மணியளவில் அழைத்து வரப்பட்டார். அவரை வழக்கமாக பரிசோதிக்கும் டாக்டர் விடுப்பில் சென்றதால் புறநோயாளிகள் பிரிவில் ஜெயக்குமாரை மருத்துவர்கள் பரிசோதித்து கண்ணுக்கு தேவையான மருந்தை அளித்தனர்.
இதை தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் ஜெயக்குமார் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இருப்பினும், முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப் படாததால் ஓரிரு தினங்களில் ஜெயக்குமார் மீண்டும் மேல்சிகிச்சைக்காக எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.