புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2016

பல்கலைக்கழக மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோருகிறது வடமாகாணசபை

யாழ். பல்கலைக்கழக மோதல் சம்பவம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என
வட மாகாணசபை சார்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தவராசா ஆகியோர் இணைந்து ஒப்பமிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஅவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் அண்மையில் ஏற்பட்ட கைகலப்பு ஓர் துரதிஷ்டவசமான சம்பவமாகும். இது தொடர்பாக விசாரிப்பதற்காக பல்கலைக்கழகத்தினால் ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதனை வரவேற்கின்ற அதேவேளையில், இச்சம்பவத்தை ஓர் சாதாரண குற்றவியல் சம்பவமாகக் கருதாமல் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொண்டமைக்கான அடிப்படைக் காரணிகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுத்துவதன் மூலம் தான் இவ்வாறான நிகழ்வுகளை மீண்டும் நிகழாமல் இருப்பதனை உறுதி செய்ய முடியும்.
வெறுமனே இவ்வாறான சம்பவங்களைக் கண்டிப்பதனாலோ, சம்பந்தப்பட்ட மாணவர்களை விசாரித்துத் தண்டிப்பதன் மூலமாகவோ நாம் உண்மையான புரிந்துணர்வையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியாது. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்ப்ட நிலையில், அவர்கள் தமக்கு நியாயங்களைக் கோரி சாத்வீக ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளை அலட்சியம் செய்து அவற்றினை ஓர் குற்றவியல் செயற்பாடாக கருதியதன் விளைவாகவே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நேர்ந்தது.
ஆதலினால், பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான நிலைமைக்குச் செல்வதற்கு அடிப்படையாக இருந்த காரணிகளை முற்றாக அறிவதற்கு ஓர் ஆக்கபூர்வமான விசாரணைக்குழு அமைத்து ஒரு பூரண விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று கோருகின்றோம். இவ்வாறு செயற்படுவதன் மூலமே மாணவர்களின் உண்மையான ஆதங்கங்களை அறிந்து அதனைத் தணிப்பதற்கான வழிமுறைகளை ஆராய முடியும். மேலெழுந்த வாரியான செயற்பாடுகள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யுமேயொழிய உண்மையான புரிந்துணர்தலை ஏற்படுத்த வழிகோலாது.
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வட கிழக்கின் குடிப்பரம்பலை மாற்றுகின்ற எண்ணப்பாட்டு செயற்பாடுகள் தொடந்து கொண்டிருக்கும் நிலையில், யுத்தக்குற்ற சுயாதீன விசாரணைகள் தொடர்பில் இழுத்தடிப்பு நிலை காணப்படும் சூழலில், பெருவாரியான பிற மாகாண மாணவ மாணவியரை வட மாகாண பல்கலைக்கழகத்தில் சேர்த்து வருகின்றமையும் அவ்வாறு சேர்க்கப்பட்டவர்கள் தங்கள் கலை, கலாசாரங்களை யாழ். மண்ணில் திணிக்க முனைவதும் தமிழர்களின் பாரம்பரிய வதிவிடங்களில் தமது அரசியல் விவகாரங்களைத் தாமே கையாளக்கூடிய வகையிலான அரசியல் தீர்வொன்றினை வழங்குவதில் தெளிவற்ற போக்கு இருப்பதும், வடகிழக்கில் தேவைக்கதிகமான இராணுவத்தினர் தொடர்ந்து இருந்து வருவதும் இவ்வாறான நடவடிக்கைகளுக்குத் தீனி போட்டு வந்திருந்தனவா? போன்ற விடயங்களும் அவ்விசாரணைக் குழுவினால் ஆராயப்பட வேண்டியிருக்கும்.
தெற்கிலுள்ள இனவாதிகள் இவ்வாறான சம்பவங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெறுவதனைத் தடுப்பதற்கும் இவ்வாறான ஏற்பாடுகள் வழிகோலும். இதனை நாங்கள் ஒருமித்து வெளியிடுவதன் காரணம் வடமாகாண சபை அரசியல் வேறுபாடுகள் இல்லாது இவ்விடயத்தில் கரிசனை கொண்டிருக்கின்றது என்பதை வலியுறுத்தவே!

ad

ad