சென்னை: தமிழ்நாட்டில் கடந்த காலங்களை விட, தவெக ஆட்சியில் குற்றங்கள் இரட்டிப்பாக நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி இருக்கிறார். பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாடிய விஜய், தற்போது பாட்டிலுக்கு 20 ரூபாய் என்று பாடுவாரா என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதே போல தவெக அரசு ரீல்ஸிலிருந்து, ரியலுக்கு வர வேண்டும். இன்றைக்கு முதலமைச்சர் அறையிலேயே ஒருவர் ரீல்ஸ் எடுக்கிறார், அதை அங்கிருந்த அதிகாரிகள் கண்டித்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றல் இங்கு இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என முதலமைச்சர் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே நடக்காமல் முதல்வர் அறையில் ஒருவர் அனைவரின் முன்னிலையில் ரீல்ஸ் எடுக்கிறார் என்றால் அதை எப்படி நாம் புரிந்து கொள்வது.
அதே போல் நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்றார்கள், ஆனால் வெறும் 6 மணி நேரத்திற்குள்ளாகவே அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் துறையில் டெண்டர்களுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று வெளியாகி இருக்கும் செய்திகள் எல்லாம் மிகவும் கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.
சென்ற ஆட்சியில் நடந்த தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும், ஆனால் அவை தற்போது இரட்டிப்பாக நடக்கிறதோ என்று பயம் எழுந்துள்ளது. குறிப்பாக பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் தவெக அரசு பொறுப்பேற்ற ஒரே வாரத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே சிங்கப்பெண் படையை அமைத்தார்கள், ஆனால் அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. அதே போல பாட்டிலுக்கு 10 ரூபாயா அல்லது 20 ரூபாயா என்ற கேள்வி இன்னும் மக்கள் மத்தியில் இருக்கிறது. பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாடியவர்கள், இனி பாட்டிலுக்கு 20 ரூபாய் என்று பாட போகிறார்களா, இல்லை 20 ரூபாய் இல்லாமல் பாட போகிறார்களா!! ஒன்னுமே புரியலையே.. என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.