புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2014




நக்கீரன் சர்வே 18-04-2014 வெளியான அன்று நம்மைத் தொடர்புகொண்ட கடலூர் தொகுதி அ.தி.மு.க. பொறுப்பாளர்களில் ஒருவர், ""நீங்க சர்வேயைப் போட்டாலும் போட்டீங்க. இங்க எங்க எல்லாரின் தலையும் உருளுது. கார்டனில் இருந்து அமைச்சர் எம்.சி.சம்பத்தை கூப்பிட்டு செமையா டோஸ் விட்டாங்க. கலெக்டர் எஸ்.பி.ன்னு எல்லோரையும் கூப்பிட்டு நிலைமைய விசாரிக்கிறாங்க''’என்றார் பரபரப்பாக.

""நாற்பதிலும் ஜெயிக்கணும். டெல்லியில் நாம் யாருன்னு காட்டணும்னு நினைக்கிறேன். ஆனா நீங்க எலக்ஷன் வேலையை ஒழுங்காப் பார்க்காம கூத்தடிக்கிறீங்க. என்னைப் பத்தி உங்க எல்லோருக் கும் தெரியும். யார் யார் சரியா வேலை பார்க்கலைங்கிறது, விழற ஓட்டி       லேயே தெரிஞ்சிடும். அப்படிப்பட்டவங்களுக்கு கடுமையான பனிஷ்மெண்ட் உண்டு''’ என ஜெ. கடு.. கடு முகத்துடன் மந்திரிகளை எச்சரிக்க, எல்லோரும் முகம் வெளிறிப்போய்விட்டார்கள். அன்றே, பதவி  போய் விடுமோ என்ற பயத்தில் சகல சாமர்த்தியத்தையும் காட்டத் தொடங்கினர். மந்திரிகளின் க்ளைமாக்ஸ் நேர வேலைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

கடலூர் எம்.சி.சம்பத்

22-ந் தேதி மாலை 5 மணியோடு பிரச்சாரம் ஓய, இதன் பின் நேராக எக்ஸ் எம்.எல்.ஏ. ஐயப்பனோடு கடலூர் ஃப்ரெண்ட்ஸ் நகருக்கு போனார் சம்பத். அங்கு கம்யூனிஸ்ட் தோழர்கள்தான் குடியிருப்பு நல சங்கத்தை நடத்துகின்றனர். 144 போட்ட நிலையிலும் நாற்பது ஐம்பது பேரை அழைத்து ‘""இந்தமுறை எங்களுக்கு உங்க ஆதரவைக் கொடுங்க. உங்களுக்கு என்ன தேவையோ அதை செய்யக் காத்திருக்கிறோம்''’என்று இரவு 8 மணிவரை கேன்வாஸ் செய்தார். தோழர்களோ ""இதுக்கு தான் போடனும்ன்னு நாங்க யாரையும் வலியுறுத்த மாட்டோம். போடறவங்க, போடுவாங்க'' என்று மந்திரியை வழியனுப்பினர்.

23-ந் தேதி நத்தம்பேட்டை பஞ்சாயத்துத் தலைவர் நித்தியானந்தரெட்டியாரைத் தொடர்பு கொண்ட சம்பத் ""எல்லோருக்கும் பணம் போய்டுச்சா?'’என விசாரித்தார். ரெட்டியாரோ ‘""பலபேர் வாங்கமாட்டேங்கறாங்க. பனங்காடு சிறுத்தைகள் பிரமுகர் மதியழகனை, பணத்தை வாங்கிட்டுப் போப்பான்னு கூப்பிட்டேன். எங்க ஓட்டு உங்களுக்கு விழாது.  அதனால் பணம் வேணாம்ன்னு சொல்லிட்டார். தி.மு.க. புருஷோத்தமனிடம், எதுக்குவேண்ணாலும் போடுங்க. பணத்தை வாங்கிக் கங்கன்னு சொன்னேன். அவரும் வேண்டாம்ய்யான்னு சொல்லிட்டார்’என அமைச்ச்சரைத் திகைக்கவைத்தார். எனினும் பண விநியோகத்திலே கவனமாக இருந்தார் மந்திரி சம்பத்.

மதுரை செல்லூர் ராஜூ; 


சென்னையில் இருந்து திரும்பியதில் இருந்தே படுடென்ஷனாக இருந்தார் செல்லூர். கட்சிப் புள்ளிகளைக் கூப்பிட்டு, ""இங்க ஓட்டுக் குறைஞ்சா எல்லோருக்குமே ஆப்பு வச்சிருவாங்க. ஏரியா முழுக்க பணம் போய்ச்சேரணும். விட்றாதீங்க''’என உத்தரவுகளைப் பிறப்பித்தார். பல பகுதிகளுக்கும் போன் போட்டு, பணம் வந்திருச்சா? என அவர் விசாரிக்க, ’இன்னும் வரலை’. ’சில பேருக்கு மட்டும் கொடுத்திருக்காங்க’ ‘பாதிக்கும் மேல ஆட்டயப் போட்டுட்டாங்க’ என்பது போன்ற பதில்களே கிடைத்தன. இதைத் தொடர்ந்து 23-ந் தேதி காலை, மதுரையில் இருக்கும் அனைத்து வட்டச் செயலாளர்களையும் தொடர்பு கொண்ட செல்லூர் ராஜு ‘எங்கெங்கே பணம் கொடுத்திருக்கீங்க. எங்கே கொடுக்கலை என்கிற விபரத்தோட, கையில் இருக்கும் பணத்தோட, தேர்தல் ஆபீஸுக்கு வாங்க. இனி கொடுக்க வேண்டியவங்களுக்கு இங்கெ இருந்தே ஆள் போட்டு கொடுத்துடறேன்''’என்றார். இதன்படி, ராஜாமுத்தையா மன்றம் எதிரில் இருக்கும் தேர்தல் அலுவலகத்தில், வட்டச் செயலாளர்கள் கணக்கு வழக்குகளோடு குவிந்தனர்.  மிச்சப் பணத்தை வாங்கி, போகாத பகுதிகளுக்குத் தானே ஆள் போட்டு அனுப்பினார் செல்லூர்.

இதற்கிடையே புதூர் தேர்தல் அலுவலகத்தில் மந்திரி இருக்கிறார் என்று ஒரு தகவல் கிளம்ப, அந்தப்பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் ஆண்களும் பெண்களுமாக அங்கே முற்றுகையிட்டனர். ‘""மந்திரியைக் கூப்பிடுங்க. எல்லாருக்கும் பணம் கொடுத்துட்டு எங்களுக்கு மட்டும் கொடுக்கலைன்னா என்ன அர்த்தம்?''’என்றனர். ’""மந்திரி இங்கே இல்லை. நீங்க எங்களுக்கு ஓட்டுப் போடமாட்டீங்கன்னு தெரியும் அதனால உங்களுக்கு பணம் கொடுக்கவேணாம்ன்னு மந்திரி சொல்லிட்டார்''’என்றார்கள் அங்கிருந்த இலைப்புள்ளிகள்.  இதைக்கேட்டு கொதித்துபோன முஸ்லிம்கள் ""நீங்களும் உங்க மந்திரியும் நாசமாப் போக... மண்ணோடு மண்ணாப் போக...''’என மண்ணை வாரி இறைத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

கிருஷ்ணகிரி கே.பி. முனுசாமி 


22-ந் தேதி தனது வலதுகரமான தூயமணியை அழைத்த மந்திரி, தளி பகுதி மலை மக்கள் ஓட்டை முழுதாக நாம் வாங்கியாக வேண்டும். அதனால் நீயே ஏரியா வாரியா சென்று விநியோகம் பண்ணிவிட்டு வா. அங்கே ஒரு  லட்சம் ஓட்டுக்காவது பணத்தைக் கொண்டு போய்ச் சேர்த்துவிட வேண்டும்'' என்றபடி அனுப்பி வைத்தார்.

இஸ்லாமிய வாக்குகள் கணிசமாக சூரியத் தரப்புக்கு செல்வதைத் தடுக்க நினைத்த முனுசாமி, தி.மு.க.விலிருந்து அதிருப்தியில் விலகி நிற்கும் இஸ்லாமியப் பிரமுகர் சம்சுதீனை தன் வீட்டுக்கு வரவழைத்து சரி செய்தார். 23-ந் தேதி போச்சம்பள்ளி அருகேயுள்ள சந்தூருக்கு பர்கூர் துணை சேர்மன் திருமால் மூலம் மந்திரி பணத்தை அனுப்பி வைக்க, அதை பங்கு பிரிப்பதில் ர.ர.க்களுக்குள் அடிதடியாகி, வழக்கும் பதிவானது. இதைக் கேள்விப்பட்ட முனுசாமி, சந்தூருக்கு வந்து ர.ர.க்களை சமாதானப்படுத்தி தேர்தல் வேலையில் இறக்கிவிட்டார்.

மயிலாடுதுறை ஜெயபால்


மயிலாடுதுறை தொகுதியில் 16 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளரும், அவர்களைக் கண்காணிக்க நான்கு பேருக்கு ஒருவர் என்றும் ஆட்களை நியமித்திருந்தது ஆளுங்கட்சி. 16 வாக்காளர்களின் ஜாதகமும் ஜெராக்ஸ் காப்பி போட்டு பொறுப்பாளர்களிடம் தரப்பட்டிருந்தது. ஓட்டுக்கு 500 என்று தலைமையிடமிருந்து வந்த 18சியை சரியாக சப்ளை செய்யச் சொல்லியிருந்தார் அமைச்சர் ஜெயபால். சில வாக்காளர்களிடம் 500ரூபாய் காந்தி புன்னகைத்தார். சில இடங்களில் ஒரே ஒரு நூறு ரூபாயும், இன்னும் சில இடங்களில் இரண்டு நூறுகளும் மட்டும்தான் விநியோகிக்கப்பட்டன.

சீர்காழி அருகேயுள்ள இளந்திட சமுத்திர ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட முழு தொகையும் கட்சி நிர்வாகிகளால் ஏப்பம் விடப்பட்டது என்ற புகார் கிளம்ப, அங்கு வந்த அமைச்சர் ஜெயபாலின் காரை மக்கள் மறித்து, அம்மா கொடுத்த பணம் எங்கே? என உரிமையோடு கேட்டுப்போராட ஆரம்பித்துவிட்டனர். அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் ஜெயபாலுக்கு பெரும்பாடாகி விட்டது. அதுபோல சீர்காழி நகரத்திலும் பணப்பட்டுவாடா சரியில்லை எனப் புகார் வர... அங்கேபோய் நிர்வாகிகளிடம் கதகளி ஆடிவிட்டார். அதன்பிறகு எங்கெல்லாம் சரியாகப் பணம் போகவில்லை என்ற புகார் வந்ததோ, அங்கெல்லாம் வைட்டமினை அனுப்பி வைத்து, இரவில் கரண்ட் கட் நேரத்தில் கதவைத் தட்டி விநியோகித்துவிட்டனர். எங்காவது ஓட்டு குறைஞ்சால் அவ்வளவுதான் எனச் சொல்லி கடைசி நேரத்தில் செம ஸ்பீடாக வேலை பார்த்தார் ஜெயபால்.

நாகை தொகுதிக்குட்பட்ட வேதாரண்யம் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. வேதரத்தினத்தை ஆஃப் செய்யும்படி அமைச்சர் சொல்ல... அதன்படி அவரது ஆட்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். "நீங்க மறைமுகமா சிக்னல் கொடுத்தாலே போதும். உங்க கட்சிக்காரங்களை நாங்க ஆஃப் பண்ணிடுவோம். நீங்க செட்டிலாயிடலாம்' என்று பேசப்பட... "ஒருபோதும் கட்சியோட முதுகுல குத்தமாட்டேன்'னு சொன்ன வேதரத்னம், ""என் தலைவர்கிட்டே உறுதி கொடுத்தபடி இந்த தொகுதியில் எங்க கட்சிக்கு 20 ஆயிரம் ஓட்டு லீடிங் காட்டுவேன்'' என்று சொல்லிவிட்டாராம்.

கரூர் செந்தில்பாலாஜி


"தம்பிதுரையை நாம மறுபடியும் ஜெயிக்க வைக்கணுமாண்ணே' என செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் கேட்டபோது, ""இல்லைன்னா நம்ம பதவி போயிடுமே'' எனச் சொன்ன அமைச்சர், கரூர் டவுனில் 200 ரூபாய் மட்டும் கொடுத்தால் அதிருப்திதான் வரும் என்பதால் தன் சொந்தப் பணத்திலிருந்து ஓட்டுக்கு 100 ரூபாய் கூடுதலாகப் போட்டு 300 என சப்ளை செய்யச் சொல்ல, அதன்படியே விநியோகம் நடந்தது. இதோடு வீட்டுக்கு வீடு சேலை, வேட்டியும் வழங்கப்பட்டது. "கிராமப்புறங்களைப் போல டவுனில் கமுக்கமாக வேலை செய்ய முடியாது, மீடியாக்களுக்குத் தெரிந்துவிடும் என்பதால், இத்தனை நாட்களாய் நல்ல முறையில் கவரேஜ் செய்த உங்களுக்கெல்லாம் பார்ட்டி' என மீடியாக்களை தனியாக அழைத்து விருந்து வைத்துக் கொண்டிருந்தார்கள் மந்திரியின் ஆட்கள். அந்த நேரத்தில் டவுன் முழுக்க அ.தி.மு.கவினர் படுஸ்பீடாக பட்டுவாடா செய்தபடி இருந்தனர். 

திருச்சி பூனாட்சி


திருச்சி தொகுதியில் கவனத்தை திசைதிருப்பாமல் பட்டுவாடா செய்யமுடியாது என்பதால், "தி.மு.க. பணம் கொடுக்கிறது, நேருவிடம்தான் பணம் மொத்தமாக உள்ளது, அங்கே ரெய்டு நடக்கிறது...' என்றெல்லாம் ஆளுந்தரப்பு மூலமாகத் தகவல்களைப் பரப்பிவிடுவதில் அமைச்சர் பூனாட்சியும் அவரது ஆட்களும் நன்றாகவே வெற்றிபெற்றார்கள். நேரு வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை போட்டுக்கொண்டிருந்த வேளையில்... ஓட்டுக்கு 200 என்ற பட்டுவாடாவை அ.தி.மு.க. தரப்பு ஜோராக நடத்திக்கொண்டிருக்க... சில பகுதிகளில் "இதுகுறித்து காவல்துறைக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கலெக்டரிடம் சொன்னால்தான் நடக்கும்' என மாற்றுக்கட்சியினர் சிலர் கலெக்டர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபடியே இருந்தனர். அங்குதான் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரனுடன் அமைச்சர் பூனாட்சி, எம்.பி. ரத்னவேலு உள்ளிட்ட அ.தி.மு.கவினர் பேசிக்கொண்டிருந்தனர் என்ற விவரம் மாற்றுக்கட்சியினருக்கு எப்படித் தெரியும்?

தஞ்சாவூர் வைத்திலிங்கம்


"தஞ்சாவூரில் டி.ஆர்.பாலு எக்காரணம் கொண்டும் ஜெயிக்கக்கூடாது' என மேலிடம் போட்ட உத்தரவை நிறைவேற்றுவதற்காக, "தி.மு.க. தரப்பில் எவ்வளவு தருகிறார்களோ அதற்கு மேல் நாம் தரவேண்டும்' என முடிவுசெய்திருந்தார் அமைச்சர் வைத்திலிங்கம். டி.ஆர்.பி.யோ "ஓட்டுக்குப் பணம் இல்லை' என்பதில் முடிவாக இருந்துவிட்டார். இந்நிலையில் கடந்த திங்களன்று மன்னார்குடியில் பெருந்திரளான உ.பிக்களுடன் வீதிவீதியாக பாலு பிரச்சாரம் செய்ய, பல இடங்களில் பொதுமக்களும் அவருடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வீடுகளில் இருந்த பெண்களும் உற்சாகமாக கை அசைத்து வாழ்த்தினர். இது வைத்திலிங்கத்தை திகிலடைய வைத்துவிட்டது.

அமைச்சர் காமராஜூடன் ஆலோசித்து உடனடியாக மன்னார்குடிக்குச் சென்றார் வைத்திலிங்கம். அங்கு வார்டு வரையிலான நிர்வாகிகளை அழைத்துப் பேசி, ""ஓட்டுக்கு 500 கொடுக்கணும். நைட்டு பணம் வந்திடும். ஒருத்தர் விடாம கொடுங்க'' என்று சொல்லிவிட்டு, பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கும் அதையே சொன்னார். அதன்படி விறுவிறு பட்டுவாடா நடக்க... பல இடங்களிலும் 500 ரூபாயில் காந்தி சிரித்தார். மந்திரியின் மனதிலும் சிரிப்பு. அந்த நேரத்தில், "மன்னார்குடியில் பணம் கொடுத்த நிர்வாகி சிக்கினார்', "பேராவூரணியில் பணம் கொடுத்தவர்களை மக்களே பிடித்து போலீசில் கொடுத்தனர்' என்ற தகவல்கள் வர... அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு டென்ஷன் அதிகமானது. சிக்கியவர்களை மீட்கவும், சிக்காமல் விநியோகிக்கவும் வியூகம் வகுத்தபடியே இருந்தார்.

தென்சென்னை  வளர்மதி

வேட்பாளர் ஜெயவர்தனின் அப்பாவான மாஜி சபா ஜெயக்குமாருக்கும் வளர்மதிக்கும் இதுவரை ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. தேர்தல் நெருக்கத்தில் வேறு வழியின்றி இருவரும் ராசியாகிவிட்டனர். ஜெயக்குமாரை தொடர்புகொண்ட வளர்மதி, ""இங்க இருக்கும் பகுதிச் செயலாளர்களும் வட்டச் செயலாளர்களும் செந்தமிழன் ஆளுங்க. அதனால் கழுவுற மீன்ல நழுவுற மீன்களா இருக் காங்க. நாம இவங்களை மட்டுமே நம்பாம தனியாவும் இறங்கணும். உங்க மீனவ குப்பங்களை முதல்ல சரிபண்ணுங்க'' என்றார். இதைத் தொடர்ந்து தென்சென்னையில் இருக்கும் 23 மீனவ குப்பங்களுக்கும் சென்று தலா 2 லட்ச ரூபாயை விநியோகித்த ஜெயக்குமார், வளர்மதியிடமும் ஒரு கோடியை தேர்தல் செலவுக்காக ஒப்படைத்தார். இந்த நிலையில் 21-ந் தேதி கட்சித் தலைமை 2 கோடியை அனுப்ப, அதில் பாதியை பகுதிச் செயலாளர்களுக்குப் பிரிந்துக் கொடுத்தார் வளர்மதி. அது ஒரு பூத்துக்கு ஒரு  லட்சம் வீதம் பிரிக்கப்பட்டது. அந்த ஒரு லட்சத்தில் 6 ஆயிரம் பூத்தில் இருப்பவர்களின் சாப்பாட்டுச் செலவுக்கு, மீதத்தை ஓட்டுக்கு 200, 300 என விநியோகிக்கச் சொன்னார். 144 தடை இருந்ததால் 5 ஓட்டுக்கு 2 பேர் வீதம் பணப்பட்டுவாடாவை நடத்தச் சொன்னார் வளர்மதி. 23-ந் தேதி முழுக்க ஏரியாவை ரவுண்ட் அடித்த வளர்மதி, ""பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா?'' என ஏரியா இலைப்புள்ளிகளை விசாரித்தபடியே இருந்தார். 23-ந் தேதி மாலை தனது க்ரீன்வேஸ் ரோடு இல்லத்துக்கு பகுதிச் செயலாளர்களையும், வட்டச் செயலாளர்களையும் அழைத்த வளர்மதி, ""இதுவரை எப்படியோ, இனி நீங்க எல்லோரும் அம்மாவுக்கு விசுவாசமா தீவிரமா உழைச்சாகணும். இங்க நிக்கிறது ஜெயக்குமார் மகனல்ல. அம்மாவின் கேண்டிடேட். மறந்துடாதீங்க. யார், யார் எப்படி வேலை செய்றோம்ங்கிறதை அம்மா கவனிச்சிக்கிட்டுதான் இருக்காங்க. அதனால் தீவிரமா வேலை செய்யுங்க'' என மிரட்டலாகவும், கெஞ்சலாகவும் பேசி, அவர்களை உசுப்பிவிட்டார்.

தூத்துக்குடி சண்முக நாதன்


இவர் கொஞ்சம் உஷார் ரகம். 21-ம் தேதியன்று தூத்துக்குடி தேர்தல் பார்வையாளர்கள் மாவட்ட நிர்வாகிகளை அனைவரையும் வரவழைத்த அமைச்சர், ""எல்லோரும் வந்துட் டீங்களா? செல்லபாண்டி அண்ணே... வாங்க, வந்து பக்கத்தில் உட்காருங்க'' என ஓவராக பாசத்தைக் காட்டினார். ""கவனமா கேட்டுக்கங்க. தொகுதிக்கு, மக்களுக்கு மேலிடம் கொடுக்குற பண விஷயத்துல நான் தலையிடலை'' என்றவர்... பீடிகையோடு,  ""மொத்த பணத்தையும் அண்ணன் சி.த.செல்ல பாண்டியன் வசம் ஒப்படைச்சுடுவோம். ஏன்னா... களத்தில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. விலை போகமாட்டார், இதுதான் என் முடிவு'' என்று கூறி சி.த.செல்லபாண்டியனின் கையைப் பிடிக்க... அங்கே பாசமலர் காட்சிகள் உச்சத்தைத் தொட்டன. "ஏன் அண்ணாச்சி இப்படி செய்திட்டீக?' என விசுவாசிகள் கேட்க... ""அவனும் (ஏசாதுரையும்), இவனும் (சி.த.செல்லபாண்டியும்) வேட்பாளரை தோற்கடித்து, என்னோட அமைச்சர் பதவி காலியாக விலை போயிட்டானுக. எப்படிச் சொன்னாலும் திருந்தமாட்டானுக. அதுதான் திருடன் கையில் சாவி கொடுப்பது மாதிரி, அவனிடமே பணத்தை கொடுத்திட்டா... எப்படியும் தன்னோட பேரைக் காப்பத்தணும்ணு வேலை செய்வான்'' என நமட்டுச் சிரிப்புடன் பதில் கூறியுள்ளார் அமைச்சர் சண்முகநாதன். கையோடு நாசரேத் சென்று மோகன் சி லாசரஸ்ஸிடம் ஆசியும் பெற்றுத் திரும்பியுள்ளார்.

சேலம் எடப்பாடி பழனிச்சாமி


22-4-14 முன்னிரவு. ""பா.ம.க.காரங்களை தி.மு.க. வளைச்சிடுச்சுனு கூச்சமில்லாமச் சொல்றீங்களே... அவங்க கொடுத்த மாதிரி ரெண்டு மடங்கு கொடுத்து நம்ம பக்கத்துக்கு திருப்ப முடியாதா? போங்க. முதல்ல கரெக்ட் பண்ணுங்க. செலவைப் பத்தி கவலைப்படாதீங்க'' -சேலம் மேற்கு எம்.எல்.ஏ. வெங்கடாஜலத்தை அனுப்பிவிட்டு, சேலம் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராசைத் தொடர்புகொண்டார் அமைச்சர் எடப்பாடி. ""முதல்ல உங்க சாதி சங்கத் தலைவரை சரி பண்ணுங்க'' குரலை கடுமையாக்கிக்கொண்டு சொன்னார். 23-4-14 நள்ளிரவில் ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு, நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய அமைச்சரிடம், வீட்டில் காத்திருந்த ர.ர.க்கள் ""நம்ம தெருவுல உள்ள அப்பார்ட்மெண்ட்காரங்களும் கவரை எதிர்பார்க்கிறாங்க'' என்றார்கள். ""நலத்திட்ட உதவிகள் வரும்போது கண்டிப்பா செய்திடலாம்னு சொல்லுங்கப்பா. ரொம்ப டயர்டா இருக்கு ஒரு 4 மணி நேரமாச்சும் தூங்கலாம்'' எல்லாருக்கும் குட்நைட் சொல்லிவிட்டு அசதியோடு வீட்டுக்குள் நுழைந்தார் அமைச்சர் எடப்பாடி.

(மற்ற அமைச்சர்களின் ஆட்டம் வரும் இதழில்)
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields

ad

ad