கர்ப்பிணிப் பெண்னை மோதிய டிப்பர் வாகனத்தை குறிப்பிட்ட இடத்தில் இருந்து அகற்றி செல்ல முற்பட்ட பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும்
இடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பொலிஸார் இராணுவத்தினரின் உதவியுடன் டிப்பர் வாகனத்தை அகற்றிச் சென்றுள்ளார்கள்.
நவக்கிரி சரஸ்வதி வீதியில் இடம் பெற்ற விபத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து குறிப்பிட்ட டிப்பர் வாகனம் இனந்தெரியாதவாகளினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் உதவியுடன் டிப்பர் வாகனத்தின் எரிந்த பின் ரயர்களை மாற்றி வாகனத்தை கட்டி இழுத்து செல்ல முயற்சி எடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட நீதிபதி வருவார், அதற்கு இடையில் மோதிய வாகனத்தை அகற்றி தடயத்தை அழிக்க முற்படுகின்றனர் எனக் கூறி பொதுமக்கள் பொலிஸாருடன் முரண்பட்டார்கள்.
இதனால் அந்த இடத்தில் சற்று நேரம் பதற்றமான நிலைமை காணப்பட்டது. குறிப்பிட்ட இடத்திற்கு மல்லாகம் நீதிவான் சமுகமளித்தமையைத் தொடர்ந்து வாகனம் அகற்றப்பட்டுள்ளது.