மதுரையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி அருகே உள்ள விநாயகர் கோயில் நிலத்தை அபகரித்ததாக அழகிரி மீது மாவட்ட குற்றப்பிரிவு பொலிஸார் புதன்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால் எந்தெந்த பிரிவுகளில் வழக்கு, புகார்தாரர் யார் என்பது குறித்த விவரத்தை செய்தியாளர்களிடம் தெரிவிக்க பொலிசார் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் அழகிரி மீதான வழக்கு குறித்த முழு விவரமும் தற்போது வெளியாகியுள்ளது.
கோயில் நிலத்தை அபகரித்ததாக புகார் அளித்தவர் சிவரக்கோட்டை விநாயகர் கோயில் நிர்வாக அதிகாரியும், தக்காருமான ஆர்.ஜெயராமன் (39) எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கோயில் நிலத்தை அபகரித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி அழகிரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், இந்த நிலம் தொடர்பாக இந்து அறநிலையத் துறைக்கும் எங்களுக்கும் திருமங்கலம் மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வழக்கில் மு.க.அழகிரியை செப்டம்பர் 3ம் திகதி வரை கைது செய்யக்கூடாது என இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். |