சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகளை, அருவருப்பானவை என இங்கிலாந்து
கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்காம் தெரிவித்துள்ளார். பிபா அமைப்பில் கடந்த இரு தசாப்த காலங்களுக்கும் மேலாக இடம்பெற்ற ஊழல் தொடர்பில் அமைப்பின் தலைவர் செப் பிளாட்டர் மற்றும் ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் தலைவர் மைக்கல் பிளாட்டினி ஆகிய இருவரும் 90 நாட்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கான நாடுகள் தெரிவில் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் என்பது தொடர்பிலும், அவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றது.
இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பெக்காம், கால்பந்து சபையில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள், மிக அதிகமானவை என்பதால் அவற்றைத் தீர்ப்பதற்கு அதிக காலமெடுக்குமென தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னைப் பொறுத்தவரை, கால்பந்து விளையாட்டானது, நடத்தப்படும் விதமும் பார்க்கப்படும் விதமும், பேரிடியாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள பெக்காம், இது அருவருப்பானது எனவும் குறிப்பிட்டார். 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ணங்க போட்டிகளுக்கான நாடுகள் தெரிவில் ஊழல் இடம்பெற்றிருந்தாலும், இல்லாவிட்டாலும் நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. எனவே அந்த நாடுகளில் மாற்றம் ஏற்படுத்தக் கூடாது எனவும் பெக்காம் வலியுறுத்தியுள்ளார்.