இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தை விடுவித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி முன்வைக்கவுள்ள யோசனையை நிராகரிக்கின்றோம். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அங்கத்துவ நாடுகளுடனும் இராஜதந்திர தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளோம்
என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் யுத்தக்குற்றம் இழைத்ததரப்பினர் மீது விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற ஐ.நா.தீர்மானத்தில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களையும் கூட்டமைப்பு மேற்கொள்ளாது. அத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் காத்திரமான பங்களிப்பு செலுத்துவோம் எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கூட்டத்தில் தான் உரை நிகழ்த்தவுள்ளதாகவும் அதன்போது இராணுவத்திற்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிப்பது தொடர்பாக புதிய யோசனை ஒன்றை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதியின் இக் கருத்துத் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளின் தலைவர்களிடம் வினாவியபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தனர்.
மாவை
ஜனாதிபதியின் இக் கூற்றுத் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவிக்கையில்,
ஜனாதிபதி இராணுவத்தினரை போர்க் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதனை நாம் ஒதுபோதும் விரும்பியதில்லை. அத்துடன் இந் நடவடிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை. இந்நிலையில் ஜனாதிபதி முன்வைக்கப் போவதாக கூறியிருக்கும் யோசனைத் திட்டத்தினை நாம் படித்த பின்பு அது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அங்கத்துவ நாடுகளிடம் எமது எதிர்ப்பினை தெரிவிப்போம்.
அதுமட்டுமல்லாது அங்கத்துவ நாடுகளுடனும் உறுப்பு நாடுகளின் இராஜதந்திர மட்டத்திலும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி ஜனாதிபதி தனது யோசனைத்திட்டத்தை முன்வைப்பதற்கு முன்பே அதற்கு எதிராக நாம் செயற்படவும் தயாராகவுள்ளோம் என்றார்.
செல்வம் அடைக்கலநாதன்
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் தலைவர் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்.
ஜனாதிபதியின் இத் தீர்மானம் தொடர்பாக நாம் மிகக் கடுமையாக எதிர்ப்புக்களைத் தெரிவிப்போம். போர்க் காலத்தில் எமது மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்ற ஐ.நா. தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் போராடி வருகின்றோம். குற்றம் இழைத்த தரப்பு விசாரணை செய்யப்பட்டு நீதி மன்றத்தின் ஊடாக அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்.
இந்நிலையில் இதனை வலியுறுத்துகின்ற ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களையும் கூட்டமைப்பு மேற்கொள்ளாது என்பதுடன் அதற்கு எதிரான மாற்றுச் சிந்தனைகள் கருத்துக்கள் உருவாகுவாதனையும் நாம் அனுமதிக்கமாட்டோம். ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு மிகவும் காத்திரமாக பங்களிப்பு செலுத்துவோம் என்றார்.
சித்தார்த்தன் எம்.பி.
இது தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சிரத்தார்த்தன் தெரிவிக்கையில்,
தற்போதைய ஜனாதிபதி மாத்திரமல்ல இந்நாட்டின் சிங்களத் தலைவர்கள் எவராக இருப்பினும் சிங்கள மக்கள் எதனை விரும்புகின்றார்களே அதனை முன்னிறுத்தி அவர்கள் செயற்படுவார்கள். இதனைத் தவிர அவர்களிடம் இருந்து வேறு எவற்றையும் நாம் எதிர்பார்கக் முடியாது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தான் முன்வைக்கப் போவதாகவுள்ள யோசனைத் திட்டங்களை முழுமையாகப் பார்த்தததன் பின்னரே அது தொடர்பில் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.
இருந்தபோதிலும் இந் நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளுக்கு எதிராகவே இவ் அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தற்போது முன்வைக்கவுள்ளதாக கூறியுள்ள யோசனைத் திட்டத்தினை அவர் முன்வைத்து அதனை முழுமையாக பார்த்ததன் பிற்பாடு அதற்கு எதிரான எமது நிலையப்பாட்டை எமது மக்களுக்கும் சர்வேதச சமூகத்திற்கு எடுத்துரைத்து நாம் கோருகின்ற சர்வதேச நீதி விசாரணையை முன்னெடுப்பதற்கு செயற்படுவோம் என்றார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன்
இதேவேளை ஜனாதிபதியின் இக் கூற்றுத் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவக் கட்சியாக இருந்து தற்போது கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு இராணுவத்தை விசாரிப்பதாக உறுதி வழங்கிய அதே தரப்பினர் தற்போது இராணுவத்தினை விசாரிக்க முடியாது எனக் கூறி வருகின்றார்கள். சர்வதேச விசாரணையையும், கலப்பு விசாரணையையும் நிராகரித்த அவர்கள் தற்போது உலக விசாரணையையும் கைவிட்டு இராணுவத்தினரைப் பாதுகாக்கும் புதிய யோசனையையும் முன்வைக்கவுள்ளார்கள்.
இவர்களுடைய இச் செயற்பாடானது குற்றம் இழைத்த எந்த ஒரு இராணுவத்தினரையும் தண்டிக்கப்படக்கூடாது என்பதனையே உறுதியாகத் தெரிவிக்கின்றது.
அவ்வாறு விசாரணைகளை மேற்கொண்டால் அது இராணுவத் தரப்பில் இருந்தும் சிங்கள் மக்களிடமிருந்தும் எதிர்ப்பினை ஏற்படுத்தும் என்பதனால் எத்தனை ஆயிரம் மக்களை கொன்றிருந்தாலும் அது தொடர்பாக விசாரணை செய்யப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.
இந்நிலையில் இத்தகைய அரசாங்கத்தினை தொடர்ந்தும் ஆதரிக்கின்ற நிலையிலேயே எமது தமிழ்த் தலைமைகளும் ஈடுபட்டுள்ளன.
அரசாங்கம் எடுத்துக்கொண்டுள்ள இந் நடவடிக்கையானது ஓர் மோசமான நிலைப்பாடு ஆகும். தமிழ் மக்களும் இந் நாட்டினுடைய பிரஜைகள். எனவே அத் தமிழ் மக்களுக்கு இராணுவத் தரப்பினாலும் அரசாங்கத்தினாலும் அநீதி இளைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விசாரணை செய்வதற்கான ஓர் பொறிமுறையை வைத்திருக்கவேண்டும்.
அவ்வாறான பொறிமுறையை தாம் மேற்கொள்வதாக உறுதி அளித்த அரசாங்கம் அதிலிருந்தும் பின் வாங்கியிருப்பதானது தொடர்ந்தும் இவ் அரசாங்கத்தை நம்பலாமா? என்ற கேள்வியை அவர்களே ஏற்படுத்தியுள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இவ் அரசாங்கத்தின் ஊடாக நியாயம் கிடைக்காது என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த பட்ச நீதியைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாத தலைமைகளை தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் நிச்சயமாக நிராகரிப்பார்கள் அதற்கான பாடத்தை தமிழ் மக்கள் நிச்சயம் வழங்குவார்கள் என்றார்.
கேள்வி : ஜனாதிபதியின் இந் நடவடிக்கை தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு எவ்வாறு அமைய வேண்டும் ?
பதில் : ஐ.நா. வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதில் தாமும் காரணம் என கூறிக்கொண்டிருக்கும் கூட்டமைப்பானது தற்போது அதிலிருந்த அரசாங்கம் பின் வாங்கும் நிலையில் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரேரணைகளைக் கொண்டு வந்தும் அங்க அரசாங்கத்திடம் இது தொடர்பான கேள்விகளைக் கேட்கவேண்டியதுடன் சர்வதேசத்தின் கவனத்தை இதன்பால் கொடுண்டுவரத் தக்க வகையில் கூட்டமைப்பு செயற்படவேண்டும்.
ஆனால் இது வரையில் அவ்வாறு செய்வதாக இல்லை. மாறாக அரசாங்கத்தைப் பாதுகாப்பதிலேயே அவர்கள் இருக்கின்றார்கள். குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காத அரசாங்கத்தை தொடர்ந்தும் தாங்கிப்பிடித்துக் கொண்டிருப்பது என்பது தமிழ்மக்களுக்கு கூட்டமைப்பு செய்யும் துரோகமாகவே அமையும் என்றார்.