பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சிரந்த ஜயலத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (02) முறைப்பாடு அளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு பின்வருமாறு குறிப்பிட்டார். 2025.01.18 மற்றும் 19ஆம் திகதிகளில் சுங்கத் திணைக்களத்தில் இருந்து எவ்விதமான பரிசோதனைகளுமின்றி சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு கப்பற்றுறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க பணிப்புரை வழங்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது. பரிசோதனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் உள்ளடங்கியிருந்த பொருட்களின் விபரத்தை அரசாங்கம் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இந்த கொள்கலன்களில் ஆயுதம், வெடிப்பொருட்கள் அல்லது தீங்கிழைக்கும் பொருட்கள் இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக சுங்கத் திணைக்கள தொழிற்சங்கத்தினர் சந்தேகிக்கின்றனர். முறையான பரிசோதனைகள் ஏதுமின்றி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்களை விடுவிப்பதற்கு கப்பற்றுறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழங்கிய பணிப்பு சட்டவிரோதமானது. இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளோம் என்றார் |