பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள கிணற்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் . உசாகரன் மாலினி( வயது 38) மற்றும் உசாகரன் மிக்சா ( வயது 11) உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த கிணற்றின் அருகில் வியாழக்கிழமை(24) அதிகாலை கைப்பை ஒன்றும் பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து கிணற்றில் சடலங்கள் இருப்பதை கிராம மக்கள் கண்டனர். பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார் இவர்கள் உயிர் மாய்த்துக் கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் |